ETV Bharat / state

“மகன், மருமகன் நலனுக்காக திமுக ஆட்சி செய்து வருகிறது” - அண்ணாமலை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 12:12 PM IST

பாஜக அண்ணாமலை
பாஜக அண்ணாமலை

BJP Annamalai Speech: பெரம்பலூரில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் சிவசங்கரின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக கூறினார்.

என் மண் என் மக்கள் நடைபயணத்தின்போது அண்ணாமலை பேச்சு

பெரம்பலூர்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவரின் ‘என் மண் என் மக்கள்’ நிகழ்ச்சி நேற்று (நவ.16) இரவு பெரம்பலூரில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரை பகுதியில் துவங்கிய இந்த நடைபயணத்தில் அண்ணாமலை, பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நடைபயணம் ரோவர் வளைவு, சங்குப்பேட்டை, கடைவீதி, மேற்கு வானொலித்திடல், பழைய பேருந்து நிலையம் வழியாக காமராஜர் வளைவுப் பகுதியில் நிறைவடைந்தது.

இதனை அடுத்து காமராஜர் வளைவுப் பகுதியில் பொதுமக்களிடம் பேசிய அண்ணாமலை, “இதுவரை 106 தொகுதியில் நடைபயணத்தை முடித்துவிட்டு, 107வதாக பெரம்பலூர் வந்துள்ளேன். திமுக தலைமையிலான ஊழல் ஆட்சியைத் தூக்கி எறிய தமிழக மக்கள் தயாராகி விட்டனர்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டம்: 70 ஆண்டு கால ஆட்சியில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் 0.6 சதவீதமும், அரியலூர் மாவட்டத்தில் 0.3 சதவீதமும் உற்பத்தித் திறன் உள்ளது. 70 ஆண்டுகளின் சாதனை இதுதான். பெரம்பலூரில் தொழிற்சாலைகள் இல்லை, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை, தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமாக பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் உள்ளன.

மனித வளர்ச்சி குறியீட்டில் பீகார் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களை விட, மிகவும் குறைவான அளவில் பெரம்பலூர் மாவட்டம் உள்ளது. தமிழகத்திற்கு புதிய அரசியல் தேவை என்பதால், மக்கள் பாரதிய ஜனதா பக்கம் திரும்பி விட்டனர். பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்காக பாரதிய ஜனதா கட்சி பாடுபடும். அதற்கான வாய்ப்புகளை பொதுமக்களாகிய நீங்கள்தான் எங்களுக்கு கொடுக்க வேண்டும்” என்றார்.

குடும்ப உறுப்பினர்களுக்காக அரசியல்: தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “பெரம்பலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தப்படாமல் திமுகவினர் ஊழல் செய்து வருகின்றனர். திமுகவைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன் ஆயிரத்து 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து உள்ளார். அதேபோல, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்துத் துறையில் 2 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார்.

இந்த ஊழல் குறித்து மிகத் தெளிவான பட்டியலை ஆதாரங்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் கொடுத்து உள்ளோம். இதனை ஆதாரங்களுடன் போஸ்டர் ஒட்டவும், நாங்கள் தயாராக உள்ளோம். தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் 16 பேர் ஊழல்வாதிகள். 30 மாத காலமாக திமுக ஊழல் செய்து வருகிறது. மகன் மற்றும் மருமகன் நலனுக்காக திமுக ஆட்சி செய்து வருகிறது.

ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டம்: திருவண்ணாமலையில் சிப்காட்டிற்கு நிலம் எடுக்கக் கூடாது என்று 125 நாட்களாக போராட்டம் செய்த 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரலாற்றில் இதுபோல எங்கும் நடைபெற்றது இல்லை. வெளிநாடுகளில் திமுக முதலீடு செய்துள்ள நிலையில், அந்த முதலீடுகளின் அடிப்படையில் விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றது.

உதாரணமாக, ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்திற்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏழை விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், திட்டத்தை செயல்படுத்தாமல் தற்பொழுது அதனை மீண்டும் ஒப்படைத்துள்ளார்கள்.

உலக ஊழலில் 2வது இடம்: 2ஜி ராசா, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தவர் என்று பத்திரிகையில் செய்தி வெளியானது. உலகிலேயே ஊழல் செய்து வரும் நபர்களின் பட்டியலில் இவரது பெயர் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள ஆ.ராசாவும், அமைச்சரான சிவசங்கரும் முன்னேறி விட்டனர். ஆனால், இரண்டு மாவட்ட மக்கள் மட்டும் முன்னேறவில்லை.

தமிழைத்தான் திணித்து வருகிறார்: இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் வேலை தேடிச் செல்லும் அவலம் தொடர்ந்து வருகிறது. இந்திய நாடு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து, தற்போது 5வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

இதற்கு காரணமான பிரதமர் மீது திமுகவினர் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். அவர் இந்தியைத் திணிக்கிறார் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், அவர் இந்தியைத் திணிக்கவில்லை. மாறாக உலக நாடுகளின் முன்பு தமிழைத்தான் திணித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகத்தான் சோழப் பேரரசின் செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், திமுகவினர் இதுபோல எதுவும் செய்யவில்லை. தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், 99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக பொய்யான தகவல்களை கூறி வருகின்றனர்.

உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்க வேண்டும்: பெரம்பலூரிலும் இதே நிலைதான். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், சட்டமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுக்காமல், உதயநிதியை புகழ்ந்து பேசி வருகிறார். இதனால் இந்த மாவட்ட மக்களுக்கு எந்த பயனும் இல்லை. பெரம்பலூர் கல்குவாரி ஏலத்தின்போது ஆட்சியர் அலுவலகத்திற்கு டெண்டர் போட வந்த பாஜகவினரை, அடித்து அவமானப்படுத்தியுள்ளனர்.

உயர் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உள்ளிட்ட பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு, நான் ஒன்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உப்பு தின்னவன் தண்ணீர் குடித்தேதான் ஆக வேண்டும். பாஜகவினர் மீது கை வைத்தவர்களை பாஜகவும், நானும் சும்மா விடமாட்டோம்.

அவர்களது நாட்கள் எண்ணப்படுகிறது. சில மாதங்கள் கழித்து பார்ப்போம். கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏழைகள் வாழ்வு வளம் பெற மூன்றாவது முறையாக பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும், அதற்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: பெரம்பலூர் அருகே பாமக பிரமுகர் அடித்து கொலை - போலீசார் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.