ETV Bharat / state

பெரம்பலூர் அருகே பாமக பிரமுகர் அடித்து கொலை - போலீசார் விசாரணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 12:20 PM IST

PMK member beaten to death
பாமக பிரமுகர் அடித்து கொலை

PMK member beaten to death: பெரம்பலூர் அருகே பாமக பிரமுகர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கலைநகரைச் சேர்ந்த ராஜூ - நீலா தம்பதியினரின் இரண்டாவது மகன் சுபாஷ். இவர் கவுல்பாளையம் கிராமத்திற்குச் செல்லும் சாலையில் உள்ள ஒரு தகர கொட்டகையில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடந்ததாக பெரம்பலூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுபாஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சுபாஷுடன் இருந்த முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில், மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து அடித்து கொலை செய்திருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்தது. மேலும், சுபாஷ் பாமக கட்சியில் உறுப்பினராக உள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்த விவரங்களை போலீசார் தீவிரமாக சேகரித்து வருவதாக கூறுகின்றனர். கொலை செய்யப்பட்ட சுபாஷ் மீது கொட்டகையை கொளுத்தியது, இருசக்கர வாகனத்தை கிணற்றில் வீசியது என இரண்டுக்கும் மேற்ப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்து கவுல்பாளையம், நான்கு ரோடு, அருமடல் பிரிவு பாதை, மலை அடிவாரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க:திருப்பத்தூர் அருகே வீட்டில் பிரசவமான பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு.. என்ன நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.