ETV Bharat / state

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தயாராகும் வடை மாலை: 1 லட்சம் வடைகள் சுடும் பணி தீவிரம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 7:26 PM IST

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தயாராகும் வடை மாலை
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தயாராகும் வடை மாலை

Hanuman Jayanti: ஜனவரி 11ஆம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள 18அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி சிலைக்கு, 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட உள்ளதால், வடை மாலை தயாரிக்கும் பணி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தயாராகும் வடை மாலை: 1 லட்சம் வடைகள் சுடும் பணி தீவிரம்..!

நாமக்கல்: மார்கழித் திங்கள் அமாவாசையன்று அனுமன் அவதரித்தார். அந்த நாளை அனுமன் ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. நாமக்கல் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் 18அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அன்றைய தினம் 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட உள்ளது. வருகின்ற 11ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளதையடுத்து பூஜைக்கான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி அன்றைய தினம் அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ளதையடுத்து, அதற்கான ஏற்பாடுகளில் கோயில் நிர்வாகம் மும்மரம் காட்டியுள்ளது. வடை மாலை அலங்காரத்தையடுத்து, ஆஞ்சநேயர் சுவாமி சிலைக்குக் காலை 11 மணிக்குப் பால் மற்றும் பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. பின்னர், பிற்பகல் 1 மணிக்கு ஜொலிக்கும் தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

ஆஞ்சநேயருக்கு மாலையாகச் சாத்தப்படவிருக்கும் 1 லட்சத்து 8 வடைகள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. சுவாமிக்குச் சாற்றப்படும் மாலை தயாரிக்கும் பணியில் ஸ்ரீரங்கம் ஆர்.கே.கேட்ரிங் சர்வீஸ் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து, கேட்ரிங் சர்வீஸின் குழுத்தலைவர் ஆர்.கே.ரமேஷ் கூறுகையில், "ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த 35 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 8 வருடங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். வடைக்கு மாவு தயாரித்துப் பதப்படுத்தி வடை தயாரிக்கும் பணிகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

2 ஆயிரத்து 50 கிலோ உளுந்து மாவு, 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 120 கிலோ உப்பு ஆகியவற்றைக் கொண்டு வடை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வடைகள் அனைத்தையும் நாளை பிற்பகலுக்குள் கோயில் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்படும். ஒப்படைக்கப்பட்ட வடைமாலை 11ஆம் தேதி அனுமன் ஜெயந்தி அன்று அதிகாலை வடை மாலை சாமி சிலையில் சாத்தப்படும்" என்றார்.

பொதுவாக ஆஞ்சநேயருக்கு பிடித்தமான பண்டம் வடை. உளுந்தம் மாவு மற்றும் நல்லெண்ணெய் கொண்டு வடை மாலைகள் தயாரிக்கப்படுகின்றது. உளுந்து ராகு பகவானுக்கு உகந்தது. அதேபோல் நல்லெண்ணெய் சனிபகவானுக்கு உகந்தது. இரண்டையும் சேர்த்து ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்தால் ராகு மற்றும் சனிபகவானின் பிடியிலிருந்து விடுபடலாம் என்பது ஆன்மீகவாதிகளால் பெரும்பாலும் நம்பப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.32.5 லட்சம் வசூல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.