ETV Bharat / state

வரதட்சணை கொடுமை: உருக்கமான வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்!

author img

By

Published : Jan 26, 2023, 8:33 AM IST

வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை
வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை

நாமக்கல் அருகே திருமணமாகி ஒரே வருடத்தில் மாமியார் வரதட்சணை கொடுமை செய்வதாக இளம்பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கொடுமை: உருக்கமான வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்!

நாமக்கல்: பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்தர். ஜவுளி தொழில் செய்து வரும் இவர், கடந்த ஆண்டு ஈரோடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அபிராமி(31) என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இதையடுத்து திருமணமான சில தினங்கள் முதலே ராகவேந்தர் தாய் மற்றும் சகோதரி இருவரும் சேர்ந்து அபிராமிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அபிராமி தனது தந்தை வீட்டிலிருந்து கொண்டு வேலைக்குச் சென்று வந்துள்ளார். இதையடுத்து நேற்று வேலைக்குச் சென்ற அபிராமி, ‘உடல் நலம் சரியில்லை வீட்டிற்குச் செல்வதாக’ கூறி கணவர் வீட்டிற்குச் சென்றதாகத் தெரிகிறது. இந்நிலையில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அபிராமி குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அபிராமி குடும்பத்தினர், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சென்று, மகள் அபிராமி சடலத்தை கண்டு கதறி அழுதனர். இதன் பின்னர் ராகவேந்தர் குடும்பத்தினர் கொடுத்த கொடுமை காரணமாக அபிராமி தற்கொலை செய்து கொண்டார் எனவும் மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அபிராமியின் தந்தை, சகோதரி உட்பட உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஈரோடு செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பள்ளிபாளையம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி தொடர்ந்து உறவினர்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். இதற்கிடையே அபிராமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது இறப்பிற்குக் கணவரின் தாய் மற்றும் சகோதரி தான் காரணம் எனக்கூறி வீடியோவினை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அபிராமி பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா மருத்துவமனையில் இருதரப்பு குடும்பத்தினர் மற்றும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அபிராமி பேசிய வீடியோ பதிவினை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தங்களிடம் தெரிவிக்காமல் உடற்கூறு ஆய்வு செய்யக்கூடாது என உறவினர்கள், மருத்துவமனையின் பிரேத அறையில் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் காவல்துறையினர் கணவர், மாமியார், நாத்தானார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரு வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை.. நிர்பயா வழக்கை நினைவூட்டிய பீகார் சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.