ஓடும் பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை.. நிர்பயா வழக்கை நினைவூட்டிய பீகார் சம்பவம்!

author img

By

Published : Jan 25, 2023, 10:00 PM IST

பாலியல் வன்கொடுமை

டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை கோர சம்பவத்தை நினைவூட்டும் வகையில் பீகாரில் ஓடும் பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நேர இருந்து கொடுமையில் இருந்து தப்ப ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியாக பெண் கீழே குதித்த நிலையில் படுகாயங்களுடன் தற்போது அவர் உயிருக்குப் போராடி வருகிறார்.

புர்ணியா: டெல்லியில் நிர்பயா பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவூட்டும் வகையிலான கோர நிகழ்வு பீகாரில் அரங்கேறி உள்ளது. பீகார் மாநிலம், பூர்ணியா பகுதியில் இருந்து மேற்கு வங்கத்தின் சிலிகுரிக்கு சென்று கொண்டு இருந்த பேருந்தில் பெண் பயணித்துள்ளார்.

தொடக்கத்தில் அதிகளவு கூட்டம் பேருந்தில் காணப்பட்ட நிலையில், நிலையங்கள் செல்ல செல்ல கூட்டம் குறைந்துள்ளது. இறுதியில் அப்பெண் மற்றும் 5 இளைஞர்கள் பேருந்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நேரம் செல்ல செல்ல பேருந்தில் இருந்த இளைஞர்கள் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பெண்ணிடம் ஆபாசமான முறையில் சைகைகளை இளைஞர்கள் காண்பித்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அத்துமீறிய இளைஞர்கள் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டு, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது. இளைஞர்களின் அநாகரிக செயல் குறித்து பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

சம்பவத்தைக் கண்ட பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இளைஞர்களை தட்டிக்கேட்காமல் தொடர்ந்து பேருந்தை செலுத்தியதாக கூறப்படுகிறது. இளைஞர்களின் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட முயன்றதை அடுத்து, பேருந்தின் ஜன்னல் வழியாக பெண் வெளியே குதித்துள்ளார். ஓடும் பேருந்தில் இருந்து, கீழே குதித்ததால் அவருக்கு கை, கால் என உடலின் பல்வேறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சாலையோரத்தில் பெண் படுகாயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயங்களுடன் துடிதுடித்துக் கொண்டு இருந்த பெண்ணை மீட்டு புர்ணியா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து உயிர் காக்கும் சிகிச்சை பெண்ணுக்கு அளிக்கப்பட்டது.

தொடர் சிகிச்சைக்கு பின் கண் விழித்த பெண் அளித்த வாக்குமூலத்தில், அவர் மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் ஆசிரியையாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. ஒரு வேலையாக பீகார் வந்த நிலையில் வைசாலி நகரத்தில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம், சிலிகுரிக்கு பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதாக போலீசார் கூறினர். பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவத்தை நேரில் பார்த்தும் தட்டிக் கேட்காத ஓட்டுநர், மற்றும் நடத்துநர் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், பெண் பயணித்த பேருந்து மற்றும் அதிலிருந்த இளைஞர்கள் குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.

இதையும் படிங்க: பிபிசியின் ஆவணப்படத்தை எதிர்த்த ஏ.கே.ஆண்டனியின் மகன்... வலுத்த எதிர்ப்பால் காங்கிரஸிலிருந்து விலகல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.