நாகப்பட்டினம்: திருவிழந்தூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயிலில் இன்று(டிச.25) வைகுண்ட ஏகாதேசியின் காரணமாக சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
மயிலாடுதுறை திருவிழந்தூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயிலானது 108 வைணவ திவ்ய தேசங்களில் 22ஆவது ஆலயமாகும். பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோயில்களுள் இது ஐந்தாவது கோயிலாகும்.
இந்த ஆலயத்தில் ஏகாதேசியை முன்னிட்டு, இன்று(டிச.25) அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெருமாள் ரத்தின அங்கியில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப்பின், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
இந்நிலையில், மயிலாடுதுறையில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சன்னிதானம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். முன்னதாக கோயிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனத்திற்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் வழிபட்ட தருமபுர ஆதீனத்திற்கு பெருமாள் கோயில் பட்டாச்சாரியார்கள் மாலை அணிவித்து துளசி பிரசாதம் வழங்கினர். சைவ ஆதீன மடாதிபதி வைணவத் திருத்தலத்தில் வழிபட்ட நிகழ்வை பக்தர்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
இதையும் படிங்க: சொர்க்க வாசல் திறப்பு விழா குறித்த புகைப்படத் தொகுப்பு