ETV Bharat / state

மயிலாடுதுறை ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு - மோடிக்கு நன்றி கூறிய டிஆர்!

author img

By

Published : Aug 5, 2023, 7:31 PM IST

ஆடி வெள்ளியை முன்னிட்டு குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்ட டி.ஆர்
ஆடி வெள்ளியை முன்னிட்டு குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்ட டி.ஆர்

தனது சொந்த ஊரான மயிலாடுதுறையில் குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் ரயில் மார்க்கமாக சென்னை திரும்பும் போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தின் புதுபிக்கும் பணி குறித்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

ஆடி வெள்ளியை முன்னிட்டு குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்ட டி.ஆர்

மயிலாடுதுறை: பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர், உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு தான் பிறந்த ஊரான மயிலாடுதுறையில் சியாமளாதேவி அம்மன் கோயிலில் நேற்று (ஆக.04) குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டார்.

குலதெய்வ வழிபாட்டை சிறப்பாக முடித்துவிட்டு இன்று (ஆக.05) மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது ரயில் நிலையத்தில் நடிகர் டி.ராஜேந்தரை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு, அவருடன் சேர்ந்து நின்று தங்கள் செல்போன்களில் புகைப்படமும், செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "தேசத்தின் மீது கொண்ட பற்றால் ‘வந்தே வந்தே மாதரம்’ என்ற பாடலை தமிழிலும், ஹிந்தியில் நான் பாடியது அனைவரின் மனதிலும் பதிந்ததற்கு காரணம் இந்த மயிலாடுதுறை மண்ணின் சந்திப்பு தான். மயில் உரு கொண்டு சிவனை பூஜித்த மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலய கும்பாபிஷேகம், செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது" என்று மாயூரநாதர் ஆலயத்தின் பெருமைகளைக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "கோயிலுக்கு அருகில் உள்ள தனது குலதெய்வமான சியாமளா தேவி அம்மன் கோயிலில் நேற்று ஆடி வெள்ளி வழிபாட்டில் கலந்துகொண்டேன். எனது தந்தையாரின் குலதெய்வமான குடவாசல் அங்காளபரமேஸ்வரி ஆலயத்திற்குச் சென்று வந்தேன். நான் உடல் நலக் குறைவு ஏற்பட்டபோது மகன் சிலம்பரசன் கூறியதால் அமெரிக்கா சென்று சிகிச்சைப் பெற்று நான் மறுபிறவி எடுத்து இங்கு நிற்கிறேன் என்றால் எனக்கு புத்துணர்ச்சி அளிப்பது இந்த மயிலாடுதுறை மண்தான்" என்றார்.

முன்னதாக பேசிய அவர், "மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடிக்குச் செல்லும் பாசஞ்சர் ரயிலில் ஏறி சென்று தான், மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் படித்தேன். அதே ரயிலில் தான் ‘ஒருதலை ராகம்’ படத்தை எடுத்தேன்" என தன் பேச்சின் வழக்கம் மாறாமல் எதுகை மோனையாகப் பேசினார். மேலும் அதனைத் தொடர்ந்து, "எனக்கு பிடித்த தரங்கம்பாடி செல்லும் ரயிலிலே ‘ஒருதலை ராகம்’ படத்தை எடுத்தேன். ஆனால் அந்தத் தரங்கம்பாடி ரயில் இன்றைக்கு இல்லை அந்தத் தடம் தான் இருக்கிறது” என்றார்.

மேலும், ரயில் வழித்தடம் இல்லை, தண்டவாளம் கூட இல்லை என்பதை பார்க்கும் போது என் நெஞ்சம் கணக்கிறது என்று சொல்லும் போதே அவர் கண்ணில்‌ இருந்து கண்ணீர் துளிர்த்து வழிந்தோடியது. ஏழை எளிய மக்கள், மீனவ மக்கள் அனைவரும் பயன்படுத்திய இந்த தரங்கம்பாடி ரயிலை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்று இந்த மயிலாடுதுறை மண்ணில் இருந்து மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுப்பதாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

மேலும், மயிலாடுதுறை, மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், மயிலாடுதுறை ரயில் நிலையத்தை 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மனதிற்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான பணிகளை காணொளி மூலம் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

‘என்னுடைய மயிலாடுதுறை ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கு செலவழிப்பது 20 கோடி... அந்தத் திட்டத்தை உருவாக்கித் தந்தது பிரதமர் மோடி... மாயவரத்தில் இருந்து இந்த தாடி...’ என்று தனது வார்த்தைகளில் எதுகை மோனை ஜாலத்தை வெளிகொணர்ந்த படி, என்னுடைய மண்ணின் சார்பிலும் மயிலாடுதுறை மாவட்ட மக்களின் சார்பிலும் இந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தன் நன்றியைத் தெரிவித்தார்.

பின்னர், மாயூரநாதர் ஆலய கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து கூறுகையில், "கடந்த வருடம் ஆடி மாதம் என்னால் கோயிலுக்கு வரமுடியாத நிலையில் இந்த வருடம் ஆடி மாதம் என் சொந்த ஊர் கோயிலுக்கு வந்து விட்டேன். என் மண்ணில் உள்ள கோயில்களை மனதளவில் எப்போதும் நினைத்துக் கொண்டுள்ளேன். அனைத்து கோயில்களையும் உள்ளுக்குள்ளேயே திருமூலரின் பாடல்களை தினந்தோறும் பாடி தரிசித்து வருகிறேன். அந்த அளவிற்கு நான் மாறிவிட்டேன். கும்பாபிஷேகம் நடக்கிறது என்று சொன்னால் என் கண்களில் ஆனந்தக் கண்ணீரால் அபிஷேகங்கள் நடக்கிறது" என்று கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 10 வயது இளைஞர்கள் குடிப்பதற்கு அரசாங்கம் மட்டுமே பொறுப்பாகாது - வைரமுத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.