ETV Bharat / state

'தமிழ்நாட்டில் கரோனா தொற்று சீராகும் வரை மீன் பிடிக்கப்போவதில்லை'

author img

By

Published : Jun 12, 2020, 5:36 PM IST

நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் கரோனா தொற்று இல்லை என அரசு அறிவிக்கும் வரை நாகப்பட்டினம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை என முடிவு செய்துள்ளனர்.
நாகை மீனவர்கள்
நாகை மீனவர்கள்

தமிழ்நாட்டின் கிழக்கு கடற்பகுதிகளில், இந்த ஆண்டு கரோனா காரணமாக மீனவர்கள் தொடர்ந்து 3 மாதம் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 61 நாள் மீன்பிடித் தடைக் காலத்தை 47 நாட்களாக குறைத்த மத்திய அரசு ஜூன் 1ஆம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லலாம் என்று அனுமதி அளித்துள்ளது.

விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் சென்று பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்வதற்கு மீன் மார்க்கெட்டுகளும் முழுமையாக திறக்கப்படவில்லை.

அதுமட்டுமல்லாது மீன்களை வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வாகனப் போக்குவரத்தும் இன்னும் முழுமையாகச் சீர் செய்யப்படவில்லை.

மீனவர்கள் கடலில் பிடித்து வரும் மீன்கள் அனைத்தையும் உள்ளூரிலேயே விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பிடித்து வரும் மீன்களில் அதிக அளவு மீன்கள் விற்பனையாகாமல் தேங்கி, வீணாகி வருகிறது.

இதன் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லத் தயங்கினர். இருப்பினும் 61 நாள் தடைக்காலம் முடிவடைந்து ஜூன் 15ஆம் தேதி கடலுக்குள் செல்லலாம் என்று முடிவு செய்த நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி மாநில காரைக்கால் மீனவர்கள், தங்கள் விசைப்படகுகளை சீரமைத்து மீண்டும் கடலுக்குள் செல்லத் தயாராகி வந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக நாகை மாவட்டத்தில் வெளியூரிலிருந்து வரும் நபர்களாலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று ( ஜூன் 11) 105 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வந்தால், அதனை வாங்குவதற்காக உள்ளூர், வெளியூர், வெளி மாவட்ட, பிறமாநில வியாபாரிகள் என மீன் இறங்குதளத்தில் அதிக அளவில் கூடுவார்கள்.

இதனால் வைரஸ் தொற்று வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது. அவ்வாறு நோய்த் தொற்று பரவினால் விளைவு கடுமையாக இருக்கும்.

இதனை அடுத்து ஜூன் 15 முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதாக இருந்த நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் ஒன்று கூடி தமிழ்நாட்டில் கரோனா தொற்று சீரடைந்தது என்று மாநில அரசு அறிவிக்கும் வரை கடலுக்குச் செல்வதில்லை என முடிவு செய்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் பழையாறு தொடங்கி கோடியக்கரை வரை 54 மீனவக் கிராமங்கள், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்ட 10 கிராமங்கள், என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மீன் ஏற்றுமதியால், ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி அந்நிய செலாவணி ஈட்டித் தரும் மீனவர்கள், தற்போது கரோனா ஊரடங்கால் கடந்த இரண்டரை மாதங்களுக்கும் மேலாக வருமானமின்றி, வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இதனை அடுத்து அரசு மீனவர்களுக்கு வழங்கிய நிவாரணம் போதாது என்பதால், கரோனா பாதிப்பு சீராகும் வரை கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என நாகப்பட்டினம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.