ETV Bharat / state

கருகிய பயிரை டிராக்டர் கொண்டு அழிக்கும் விவசாயி! காவிரி தண்ணீர் இல்லாததால் அவலம்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 7:02 PM IST

ஒருமாதம் வளர்ந்து கருகிய பயிரை டிராக்டர் கொண்டு அழிக்கும் விவசாயி!
ஒருமாதம் வளர்ந்து கருகிய பயிரை டிராக்டர் கொண்டு அழிக்கும் விவசாயி!

Farmer destroyed his crops with a tractor: பச்சைப்பாசி படர்ந்ததால் கருகிய தன் பயிர்களை டிராக்டர் கொண்டு அழித்த விவசாயி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த காவிரி நீரை அரசு பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைவால் போர்வெல் மூலம் வயலில் இறைக்கப்படும் தண்ணீரில் பச்சைப்பாசி படர்ந்து பயிர்கள் கருகி சேதமடைந்ததால் ஒருமாதமாக வளர்ந்து பின் கருகிய பயிரை விவசாயி டிராக்டர் கொண்டு அழித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் பம்புசெட் நீரை கொண்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதிக அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் 1 லட்சத்து 84 ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும், சம்பா சாகுபடிக்கு காவிரிநீர் கிடைக்காததாலும் பம்புசெட் நீரை கொண்டே விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஆற்றில் நீர்வரத்து இல்லாததாலும், இயல்பைவிடக் குறைந்த மழைபொழிவு காரணமாகவும் மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.பச்சைப்பாசி படர்ந்ததால் கருகிய தன் பயிர்களை டிராக்டர் கொண்டு அழித்த விவசாயி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த காவிரி நீரை அரசு பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கிய.. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம்!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொன்னூர், கட்டளச்சேரி, பாண்டூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள், போர்வெல் மூலம் வயலில் இறைக்கப்படும் தண்ணீரில் பச்சைப்பாசி படர்ந்ததால் பயிர்கள் கருகி நாசமாயின.

இந்நிலையில் பொன்னூர் கிராமத்தில் விவசாயி அகோரம் என்பவரது நிலத்திலும் பச்சைப்பாசி படர்ந்ததன் காரணமாக நெற்பயிர்கள் முற்றிலும் கருகி சேதமடைந்தது. இந்த பயிர் பாதிப்பினை ஸ்டாமின் இயக்குநர் பி.சங்கரலிங்கம், வேளாண்மை இணை இயக்குநர் சேகர் மற்றும் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியல் பேராசிரியர் ராஜப்பன் தலைமையில் பயிர் நோயியல் துறை, உழவியல் துறை, மண்ணியல் துறை விஞ்ஞானிகள் கடந்த வாரம் ஆய்வு செய்தனர்.

மேலும் இக்குழுவினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு தாலுகாக்களில் பச்சைப்பாசி பாதிப்புகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில், ஒரு மாதத்துக்கும் மேலாக வளர்ந்து, பின்னர் கருகிய பயிர்களை விவசாயி அகோரம் டிராக்டர் கொண்டு அழித்தது காண்போரை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.

விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவ்வாறு மழை பெய்யும்பட்சத்தில், நிலத்தடி நீர் மட்டம் உயரும், அதனால் போர்வெல் தண்ணீரில் பச்சைப்பாசி பாதிப்பு நீங்கும் என்ற நம்பிக்கையுடன், மீண்டும் நடவுப்பணியை மேற்கொள்ள உள்ளார் விவசாயி அகோரம்.

மேலும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20,000 செலவு செய்துள்ள நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இஸ்ரேல் - பாலஸ்தீனிய போர் எதிரொலி: சிறுவன் கொலை; பெண் படுகாயம்.. வீட்டு உரிமையாளர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.