ETV Bharat / state

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய.. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 4:35 PM IST

Updated : Oct 17, 2023, 11:35 AM IST

veerapandiya-kattabomman-was-hanged-day-spacial-story
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம்

veerapandiya kattabomman: ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாளான இன்று அவர் குறித்தான தகவல்களை பார்க்கலாம்..

தூத்துக்குடி: ஆங்கிலேயர்களை எதிர்த்து நம் பாரத தேசத்திற்காக போராடி, தன்னை தூக்கு மேடை ஏற்றிய போதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு தமிழர்களின் வீரத்தை உலகிற்கு உணர்த்திய மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு தினம் இன்று அக் (16) அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்: வீரபாண்டிய கட்டபொம்மன். அப்போதைய நெல்லை மாவட்டத்தில் (தற்போது தூத்துக்குடி) உள்ள பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தை ஆட்சி செய்தவர். பாளையம் என்பது குறுநில அரசை குறிக்கும் சொல் ஆகும். முன்பு பாஞ்சாலங்குறிச்சி ஊர் இருந்த பகுதி வெறும் காடாக இருந்தது.

அப்போது வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை கட்டபொம்மு அந்த காட்டு பகுதிக்கு சேனைகளுடன் வேட்டைக்குச் சென்றார். அப்போது ஒரு முயலை நாய் துரத்தி வந்ததை பார்த்தார். ஒரு இடத்தில் வந்த போது திடீர் என்று அந்த முயலுக்கு வீரம் வந்து, நாயை துரத்திச் செல்ல ஆரம்பித்ததாம். இதைக்கண்டு அதிசயப்பட்ட கட்டபொம்மு உடனே வீரம் நிறைந்த அந்த இடத்தில் கோட்டையைக் கட்டி, பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரிட்டு ஊரையும் நிர்மாணித்தார்.

கட்டபொம்முவுக்கு வீரபாண்டியன், ஊமைத்துரை, துரைசிங்கம் என்ற மூன்று மகன்கள். வீரபாண்டியன் 1760-ம் ஆண்டு பிறந்தார். பெயருக்கு ஏற்பவே மாவீரனாக விளங்கினார். தந்தையின் பெயரையும் சேர்த்து அவருக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயர் வந்தது.

தன்னுடைய 30-வது வயதில் பாஞ்சாலங்குறிச்சி மன்னராக வீரபாண்டியன் முடி சூடினார். அதன் பின்னர் மக்களுக்கு நல்லாட்சி நடத்தினார். ஆங்கிலேயர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆங்கிலேயர்கள் பலமுறை கேட்டனர். ஆனால், எதற்கும் அவர் செவி சாய்க்கவில்லை.

மானம் ஒன்றே பெரிது; மாற்றானிடம் மண்டியிட மாட்டேன் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். எனவே நயவஞ்சகமாக அவரை கைது செய்யவும் சூழ்ச்சி செய்தனர். அதுவும் பலிக்கவில்லை. இறுதியில் போர்தான் முடிவு என்று பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை நோக்கி பெரும்படையுடன் வந்து முற்றுகையிட்டனர்.

பீரங்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களைக் கொண்டு கோட்டையை தாக்கினர். அந்த வீரக்கோட்டை சேதம் அடைந்து இடியும் தருவாயை எட்டியது. ஆங்கிலேயர்களின் பிடியில் சிக்காமல் இருக்க தம்பிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். பின்னர் பல்வேறு இடங்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.

கட்டபொம்மன் கைது: அக்டோபர் 1, 1799-ல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு, கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன். இதனை தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கயத்தாறில் மரத்தின் கீழ் இருந்த சிறிய அறையில் விசாரணை நடந்தது.

இந்த கட்டிடம் தற்போது இல்லை, இந்த போலியான விசாரணை முடிவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவின்படி, அக்டோபர் 16-ம் தேதி, 1799-ம் ஆண்டில் கயத்தாறு ஒரு புளியமரத்தில் மக்கள் முன்னிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கு கயிற்றை முத்தமிட்டு மரணத்தை தழுவினார்.

கட்டபொம்மனை கயத்தாறில் தூக்கிலிடப்பட்டது ஏன்?: வீரபாண்டிய கட்டபொம்மனை கைது செய்து பாஞ்சாலங்குறிச்சியிலேயே ஆங்கிலேயர்கள் தூக்கிட்டு இருக்க முடியும், ஆனால் பிற பாளையத்தார்களை அச்சத்தில் ஏற்படுத்தவும் அவர்களுக்கு ஆங்கிலேயர்களை எதிர்த்தால் கட்டபொம்மனின் நிலைதான் என்பதன் உணர்த்தும் விதமாக பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கயத்தாறில் புளியமரத்தில் தூக்கிலிட்டனர் கும்பினியார்கள்.

கட்டபொம்மனின் தம்பிகள் இருவரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். வீரபாண்டியனை இழந்தாலும், பாஞ்சாலங்குறிச்சி மக்களின் வீரம் மட்டும் குறைந்து விடவில்லை. சிறையில் அடைபட்டுக் கிடந்த மாவீரன் ஊமைத்துரையை மீட்டு வந்து பாஞ்சாலங்குறிச்சி மன்னராக்க நினைத்தனர். திடீர் என்று ஜெயிலில் இருந்து ஊமைத்துரை கூட்டாளிகளுடன் தப்பித்தார்.

ஊமைத்துரை கோட்டை: இதனையடுத்து 7 ஆயிரம் பேரை ஒன்று திரட்டி குறைந்த நாட்களில் பாஞ்சாலங்குறிச்சியில் புதிய கோட்டையை நிர்மாணித்தார். களிமண்ணை குழைத்து கட்டி இருந்தாலும், அந்த கோட்டை மிகவும் வலிமையாக இருந்தது. ஊமைத்துரை கட்டிய கோட்டையை ஆங்கிலேயர்கள் அப்போதே ‘ஜிப்ரால்டர் கோட்டை’ என்று வர்ணித்தனர்.

அதாவது ஸ்பெயின் நாட்டின் தென்முனையில், கடல் அருகே மலைகளோடு அமைந்த கோட்டையைத்தான் ஜிப்ரால்டர் என்று அழைத்தார்களாம். அப்படிப்பட்ட ஜிப்ரால்டர் கோட்டைக்கு நிகரான வலிமையுடன் ஊமைத்துரை கட்டிய களிமண் கோட்டை இருந்ததாம்! ஊமைத்துரையை வீழ்த்தவும் ஆங்கிலேயர்கள் பெரும் படையுடன் வந்தனர்.

அப்போது ஊமைத்துரை வீரப்போரிட்டு ஆங்கிலேய படை வீரர்களை கொன்று குவித்தார். இருந்தாலும் அவர்கள் போரில் பயன்படுத்திய நவீன ஆயுதங்களால், பாஞ்சாலங்குறிச்சி படையினர் கடைசியில் பின்வாங்க நேரிட்டது. முடிவில் ஊமைத்துரையும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் தன் இன்னுயிரை இழந்தார். அவர் கட்டிய கோட்டையும் இடிக்கப்பட்டது.

பாஞ்சாலங்குறிச்சியில் அதன் பின்னர் கோட்டை எதுவும் கட்டி விடக் கூடாது என்ற குறுகிய எண்ணத்தில் அங்கு எருக்கு, ஆமணக்கு விதைகளை வெள்ளையர்கள் விதைத்தனர். இதன் மூலம் அந்த வீரமண்ணின் தன்மையை மாற்ற முயற்சித்தனர்.

திரை வடிவில் உயிர் கொடுத்த சிவாஜி: கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட புளியமரம் இருந்த இடத்தில் அவருக்கு கம்பீரமான சிலை எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த இடத்தை விலை கொடுத்து வாங்கி சொந்த செலவில் சிலை வைத்து தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தவர் கட்டபொம்மனுக்கு திரை வடிவில் உயிர் கொடுத்த மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பது இந்நாளில் குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படிங்க: சர்வதேச உணவு தினம் : பட்டினியில்லா சமுதாயத்தை உருவாக்க போருக்கு தயாராகும் பசி!

Last Updated :Oct 17, 2023, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.