ETV Bharat / state

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் -  பி.ஆர். பாண்டியன்

author img

By

Published : Apr 14, 2022, 9:55 PM IST

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பி.ஆர். பாண்டியன் நேரில் ஆய்வு செய்து, தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை: சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மருவத்தூர் உள்ளிட்ட பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயிர் சாகுபடி வயல்களை தமிழ்நாடு காவிரி விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்தும் இதுவரை காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. கோடை தொடர் மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, பயிறு, பருத்தி உள்ளிட்ட மானாவாரிப் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனை வேளாண்மைத்துறை அலுவலர்களைக் கொண்டு உயர்மட்டக் குழு அமைத்து தமிழக அரசு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி டெல்டாவில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் மானாவாரி பயிர்களான உளுந்து, பயிறு, பருத்தி, எள்ளு, நிலக்கடலை உள்ளிட்டவை தொடர் மழையின் காரணமாக அழிந்து விட்டதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்

மேலும், தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை அலுவலர்களைக் கொண்டு கள ஆய்வில் ஈடுபட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் பயிர் காப்பீடுத் தொகையையும் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மேலடுக்கு சுழற்சி: தென் தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.