ETV Bharat / state

ஆடி பௌர்ணமி: மதுரையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

author img

By

Published : Jul 31, 2023, 12:52 PM IST

ஆடி பௌர்ணமியை முன்னிட்டு அதிகரித்த  பூக்கள் விலை
ஆடி பௌர்ணமியை முன்னிட்டு அதிகரித்த பூக்கள் விலை

ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு மதுரையில் மல்லிகை உட்பட பல்வேறு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அடுத்தடுத்த நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என வியாபாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மதுரை: ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு மதுரையில் மதுரை மல்லிகை உட்பட பல்வேறு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. அடுத்தடுத்த நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என வியாபாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்து உள்ளது மலர் வணிக வளாகம்.

இங்கு வாடிப்பட்டி, பாலமேடு, வலையங்குளம், சிலைமான், ஆனையூர், சத்திரப்பட்டி, ஊமச்சிகுளம் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் போன்ற அண்டை மாவட்டங்களின் பகுதிகளில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் இங்கே விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு நாள்தோறும் சராசரியாக 50 டன்னுக்கும் மேல் பல்வேறு வகையான பூக்கள் விற்பனை ஆகின்றன.

மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்தை பெற்ற மதுரை மல்லிகை உலக அளவில் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. மதுரை மல்லிகையின் கூடுதலான மணம், தரம், தன்மை பிற மல்லிகை பூக்களில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது. இதன் காரணமாக மதுரை மல்லிகை இந்த மலர் சந்தையில் அதிக அளவு விற்பனை ஆகிறது.

மதுரை மல்லிகை பிற மாவட்டங்கள் மட்டுமன்றி பிற மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் விமானத்தின் மூலமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் நறுமணப் பொருட்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கும், வெளிநாடுகளுக்கும் சராசரியாகப் பத்திலிருந்து பதினைந்து டன்கள் மதுரைக் குண்டு மல்லிகை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இன்று ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.

மதுரை மல்லிகை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 600 ஆகவும், சம்பங்கி ரூபாய் 300, செவ்வந்தி ரூபாய் 250, அரளி ரூபாய் 250, பட்டன் ரோஸ் ரூபாய் 200 என விற்பனை ஆகிறது. மதுரை மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், “ஆடி மாத பௌர்ணமி நாளை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மேலும் வரும் நாட்களில் ஆடி மாதத்தில் ஆடி பதினெட்டாம் பெருக்கு உட்பட முக்கிய விசேஷ தினங்கள் அடுத்தடுத்து வருகின்ற காரணத்தால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என அவர் தெரிவித்து உள்ளார். ஆடி மாதம் துவங்குவதற்கு முன்பாக மதுரை மல்லிகை, கிலோ ரூபாய் 300க்கும் குறைவாக விற்பனையாகி வந்த நிலையில் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் பூக்களின் வரத்து சுமாராக உள்ளதால் மேலும் அதிகரிக்கக் கூடும் என வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: இதுக்கு ஒரு எண்டே இல்லையா சார்.? தக்காளி விலை உயர்வால் தத்தளிக்கும் மக்கள்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.