ETV Bharat / state

சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க மேலும் 4 மாத கால அவகாசம் நீட்டிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 5:28 PM IST

satankulam father and son murder case
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க மேலும் 4 மாதம் கால அவகாசம்..!

Satankulam father and son murder case: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க மேலும் 4 மாத காலம் அவகாசம் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாகவும், பின்னர் அவர்கள் கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர்.

இதனை அடுத்து, சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது. இதனையடுத்து, 9 பேர் மீதான குற்றப்பத்திரிகையை கடந்த 2020 செப்டம்பரில் சி.பி.ஐ தாக்கல் செய்தது.

இந்த கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜெயராஜ் மனைவி செல்வராணி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ள போலீசார் செல்வாக்கு மிக்கவர்கள். அவர்கள் சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளது. எனவே, மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இருப்பினும், இந்த வழக்கு விசாரணையில், 2 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு, மேலும் 4 மாத கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிடக் கோரி, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தரப்பில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி வடமலை முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் தரப்பில் ஒவ்வொரு வழக்கறிஞரும் தனித்தனியாக குறுக்கு விசாரணை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. ஆகவே, வழக்கு விசாரணையை முடிக்க காலதாமதம் ஆகிறது. எனவே, மேலும் 4 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க மேலும் 4 மாதம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தென்மாவட்ட கனமழை எதிரொலி.. அண்ணா பல்கலைக்கழகத்தால் ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.