ETV Bharat / state

சரபங்கா திட்டம்: தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மனு!

author img

By

Published : Aug 24, 2020, 2:25 PM IST

சரபங்கா திட்டம் :  தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி மனு!
சரபங்கா திட்டம் : தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி மனு!

மதுரை : மேட்டூர் சரபங்கா திட்டம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கினை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேட்டூர் சரபங்கா திட்டம் தொடர்பாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார்.

அதில், "காவிரி நதி நீரைப் பங்கிடுவது தொடர்பாக கர்நாடக - தமிழ்நாடு மாநிலங்களுடன் பிரச்னை எழுந்த நிலையில் அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசிடம் அனுமதி எதையும் பெறாமல் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை சார்பில் புதிய அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அரசாணையில், டெல்டா பாசனத்திற்காக வழங்கப்படும் காவிரி நீரின், உபரியை குழாய் மூலமாக எடப்பாடிக்கு கொண்டுசெல்வது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது. தமிழ்நாடு முதலமைச்சர் இது தொடர்பாக சட்டப்பேரவையில் எவ்விதமான விவாதத்தையும் நடத்தாமல் அவசரமாக இந்த அரசாணையை பிறப்பித்துள்ளார். தனது சொந்த தொகுதிக்கு மட்டும் நன்மையை செய்யும் வகையில், "மேட்டூர் சரபங்கா திட்டம்" என்னும் பெயரில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது கரோனா நோய்த்தொற்று பரவிவரும் சூழலில் இதற்கான பணிகளைத் தொடங்குவதில் முனைப்பு காட்டுவதாகத் தெரியவந்துள்ளது. ஆகவே இவற்றைக் கருத்தில்கொண்டு காவிரியின் உபரிநீரை எடப்பாடிக்கு குழாய் மூலமாகக் கொண்டுசெல்வதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர், "அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல்செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும் சேலம் மாவட்டத்தின் விவசாய சங்கத்தினரை மனுதாரருக்கு எதிராகத் தங்களையும் வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இதையேற்ற நீதிபதிகள் வழக்கின் மீதான விசாரணையை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.