ETV Bharat / state

"ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம்" - எ.வ.வேலு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 3:27 PM IST

Jallikattu Stadium Name: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மதுரையில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கருணாநிதி பெயர் வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள்
ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கருணாநிதி பெயர் வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள்

ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம்

மதுரை: அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தின் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "பல்வேறு நவீன வசதிகளோடு தமிழர்களின் பாரம்பரியத்தைப் போற்றி பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு அரங்கத்தில் தற்போது, 100 சதவீத பணிகள் நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு அரங்கத்தை இந்த மாதத்திற்குள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்த போது அதற்கு பல்வேறு வகையிலும் போராடி இன்றைக்கு ஜல்லிக்கட்டு நடைபெறக் காரணமாக இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளோடும், கட்டுப்பாடுகளோடும் மதுரையில் ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் பாரம்பரியம் மாறாமல் நடைபெற்று வருகின்றன.

அந்த அடிப்படையில், பொதுமக்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஜல்லிக்கட்டு அரங்கிற்குக் கருணாநிதியின் பெயர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதியோடு சூட்டப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். ஆகையால், கருணாநிதியின் பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்தால் அது ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகத்தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: மதுரை திறப்பு விழா காணும் முன்பே சர்ச்சைக்குள்ளாகும் ஜல்லிக்கட்டு அரங்கு.. காரணம் என்ன?

தற்போது, அரை வட்ட வடிவாக அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கம் தமிழ்நாடு அரசின் நிதி நிலையைப் பொறுத்து உருவாக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் முழு வட்ட வடிவில் அரங்கம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம். இப்பகுதியில் சாலை அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு தற்போது பணம் வழங்கப்பட்டு வருகிறது. அதனை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கின்றனர்” என கூறினார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர், சுற்றுலா மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: மதுரையில் 90 சதவீதம் பேருந்துகள் இயக்கம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.