ETV Bharat / state

மதுரை திறப்பு விழா காணும் முன்பே சர்ச்சைக்குள்ளாகும் ஜல்லிக்கட்டு அரங்கு.. காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 10:08 PM IST

Alankanallur Jallikattu stadium
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கு

Madurai Jallikattu stadium: அலங்காநல்லூர் அருகே சுமார் ரூ.44 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கம்,இன்னும் சில தினங்களில் திறப்பு விழா காண உள்ள நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளது. இது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பை இந்த செய்தியில் காண்போம்.

திறப்பு விழா காணும் முன்பே சர்ச்சைக்குள்ளாகும் ஜல்லிக்கட்டு அரங்கு.. காரணம் என்ன?

மதுரை: பண்டைய ஏறுதழுவுதல் பண்பாட்டின் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு, தமிழர்களின் தனிச்சிறப்பு மிக்க மரபு அடையாளமாகத் திகழ்கிறது. விலங்கு வதை என்ற அடிப்படையில் இவ்விளையாட்டுக்குத் தடை ஏற்பட்டபோது, கடந்த 2016-ஆம் ஆண்டு, தமிழகம் முழுவதும் நடைபெற்ற தன்னெழுச்சியான போராட்டத்திற்கு பிறகு நிரந்தர தீர்வு கிடைத்தது.

பிரம்மாண்ட மைதானம்: இந்நிலையில், அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், ரூ.44 கோடியில் சுமார் 67 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த அரங்கத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வண்ணம் அரை வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

வருகின்ற தைப்பொங்கலை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த அரங்கத்தில் செய்யப்பட்டுள்ளன. இங்கு நடைபெறும் போட்டிகளைக் காண வருகை தரும் மக்கள் எளிதில் வந்து செல்ல வசதியாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வசதிகளோடு இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டாலும், அலங்காநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இதுகுறித்து ஈடிவி பாரத் மேற்கொண்ட கள ஆய்வில், தங்களது குமுறல்களை பொது மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு அரங்கம் அவசியமற்றது: இது குறித்து அலங்காநல்லூர் அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கார்த்திக் கூறுகையில், 'மிகப் பெரிய பொருட்செலவில் ஜல்லிக்கட்டு அரங்கம் கீழக்கரை கிராமத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இது அவசியமற்றது.

மொத்த 12 மாதங்களில் ஜனவரி தொடங்கி மே வரை 5 மாதங்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. தோராயமாகத் தமிழ்நாடு முழுவதும் 100-150 ஜல்லிக்கட்டுகள் நடைபெறுகின்றன. அவரவர் ஊரில் நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டை விட்டுவிட்டு இந்தத் திடலில் நடத்த மக்கள் எவ்வாறு ஒப்புக் கொள்வர்? பொதுவாக ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தோடு தொடர்புடையது.

அந்தந்த ஊர்களில் உள்ள கோவில் மற்றும் அதன் திருவிழாவை ஒட்டி நடைபெறுவதாகும். குறைந்த பொருட்செலவில் வாடிவாசல் அமைத்து அந்தந்த ஜல்லிக்கட்டு விழாக்களை மக்கள் நடத்தி வருகிறார்கள். தற்போது முறையான தடுப்புகள் அமைத்து தேவையான ஏற்பாடுகளைச் செய்து நடத்துவதற்குக் குறைந்தது ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வரை செலவாகிறது.

அதேபோக பரிசுப்பொருட்களுக்கான செலவு. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னிறுத்தி சொந்த, பந்தங்கள் ஊர்களுக்கு வருவதைத்தான் மக்கள் விரும்புவார்கள். பள்ளி விளையாட்டுப் போட்டிகளெல்லாம் மதுரையைப் பொறுத்தவரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதனால் உள்ளூர் பள்ளிக்கூடங்களில் விறுவிறுப்பாக நடைபெறக்கூடிய அந்தத் தன்மை குறைந்துவிட்டது. அதுபோன்ற நிலைதான் இந்த ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கும் நிகழும். ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கான செயல்திட்டங்கள் என்ன என்பதே இன்னும் தெளிவாக இல்லை.

தேவையில்லாமல் வனப்பகுதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது இந்த ஜல்லிக்கட்டு அரங்கம். இதனால் வன உயிர்கள் பாதிப்புக்கு ஆளாகும். ஒரத்தநாடு, நாமக்கல்லில் மட்டுமே கால்நடைப் பல்கலைக்கழகம் உள்ளது. கால்நடை சம்பந்தமான ஜல்லிக்கட்டு, ரேக்ளா, கிடா சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் நடைபெறும். மதுரை மாவட்டத்தில் இதுபோன்ற கால்நடைப் பல்கலைக் கழகத்தை ஜல்லிக்கட்டு அரங்கத்திற்குப் பதில் அமைப்பதே சரியான தீர்வாக இருக்கும்' என்கிறார்.

மக்கள் கேட்காத ஒன்று: அலங்காநல்லூரைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் விக்ரம் கூறுகையில், 'ஜல்லிக்கட்டு மைதானம் என்ற பெயரில் பாரம்பரியமாகக் கிராமங்களில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களை முடக்கும் முயற்சி இது. ஒரு குழப்பமான சூழலில்தான் ஜல்லிக்கட்டு அரங்கம் திறக்கப்படவுள்ளது.

சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கலைக்கல்லூரி வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஆனால் அந்தக் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல், மக்கள் கேட்காத ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதை எவ்வாறு ஏற்பது? ஐபிஎல், கபடி லீக் போன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகளை இந்த அரங்கில் நடத்தலாம். ஆனால், மாறாகப் பாரம்பரியங்களில் தமிழக அரசு தலையீடு செய்வதை ஏற்க முடியாது' என்கிறார்.

மேலும் அலங்காநல்லூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும் இதே போன்ற உணர்வு மக்களிடையே இருப்பதைக் காண முடிகிறது. மேலும் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு எளிதாகச் செல்வதற்கு வசதியாக தனிச்சியம்-அலங்காநல்லூர் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் வகையில் ஏறக்குறைய 3 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காகக் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு இதுவரை பணம் தரவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதற்கிடையே ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டியிருப்பதற்கும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

கருணாநிதிக்கும் ஜல்லிக்கட்டும் என்ன தொடர்பு? இதுகுறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் செயற்குழு உறுப்பினர் கதிர் நிலவன் கூறுகையில், 'அலங்காநல்லூர் அருகேயுள்ள கீழக்கரை கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜல்லிக்கட்டு அரங்கம் அமைத்ததையே அந்தப் பகுதி மக்கள் விரும்பாத நிலையில், கருணாநிதியின் பெயரை அந்த அரங்கத்திற்குச் சூட்டுவது கண்டனத்திற்குரியது.

கருணாநிதிக்கும் ஜல்லிக்கட்டும் என்ன தொடர்பு உள்ளது? 1965 மொழிப்போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டமே மிகப் பெரிய எழுச்சிக்குரியது. ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சி திமுக.

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நீண்ட காலப் போராட்டத்தின் விளைவாக இன்று ஜல்லிக்கட்டு உரிமை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. திமுக, காங்கிரசுடன் கூட்டணி அமைச்சரவையில் இருந்த போது தான் விலங்குகள் வதை சட்டத்தில் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் ஜல்லிக்கட்டு காளையைச் சேர்த்து சட்டம் கொண்டு வரப்பட்டது.

அந்தக் காலகட்டங்களில் திமுக ஜல்லிக்கட்டு உரிமைகளுக்காக என்ன செய்தது என்பதுதான் எங்கள் கேள்வி. பாண்டிய மாமன்னர்களின் நினைவாக மதுரையில் எந்தவித அடையாளமும் இல்லாத நிலையில், பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை ஜல்லிக்கட்டு அரங்கத்திற்குச் சூட்டுவதுதான் சரியானது' என்றார்.

இதையும் படிங்க: மூன்றாம் பாலினத்தவருக்கு 5 சதவீத வேலைவாய்ப்பு - கோத்ரேஜ் நிறுவனம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.