மதுரை ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ரயில் நிலையத்திற்கு இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உறவினர்களை ரயில் நிலைய வளாகத்தில் சூழ்ந்து பிரீமியம் டோக்கன் போட குத்தகைதாரர்கள் சுற்றித் திரிகின்றனர்.
குறிப்பாக மதுரை ரயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் பகுதியில் ரயில்வே ஊழியர்களுக்கான வாகன நிறுத்தத்தில் பிரீமியம் வாகன காப்பகம் என்ற பலகை வைத்து வசூலில் தீவிரம் காட்டி வருவது பயணிகள் மற்றும் ரயில்வே துறை பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இருசக்கர வாகனத்திற்கு முதல் 6 மணி நேரத்திற்கு 20 ரூபாயும், சைக்கிள்களுக்கு 12 மணி நேரத்திற்கு 10 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் பகுதியில் வாகன காப்பகம் ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதன் குத்தகைதாரர்கள் ரயில் நிலைய வளாகம் முழுவதையும் ஆக்கிரமித்து வசூலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. குறிப்பாக மதுரை மாநகராட்சியின் வாகன காப்பகங்களில் இருசக்கர வாகனம் ஒன்றுக்கு 12 மணி நேரத்திற்கு 8 ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திடக்கழிவு மேலாண்மையில் அசத்தும் குருடம்பாளையம் ஊராட்சி