ETV Bharat / state

"பல்வீர் சிங் தான் பல்லை கல்லால் அடித்து உடைத்தார், கல்லை கடிக்க சொன்னார்" - பாதிக்கப்பட்ட இளைஞர் பரபரப்பு பேட்டி!

author img

By

Published : Apr 6, 2023, 11:10 AM IST

mdu
அம்பா

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் போலீசார் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சில இளைஞர்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை செய்தியாளர்கள் முன்பு விளக்கினர். காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் பல்லை கல்லால் அடித்து உடைத்ததாகவும், கற்களை கடிக்க சொல்லி சித்திரவதை செய்ததாகவும் கூறியுள்ளனர்.

மதுரை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்துவரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி, கொடூரமாக சித்திரவதை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பூதாகரமான நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சிலர், தங்களை போலீசார் தாக்கவில்லை என்றும், கீழே விழுந்து பல் உடைந்ததாகவும் கூறினர். காவல்துறையினர் அச்சுறுத்தியதன் காரணமாகவே பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு கூறுவதாக பேசப்பட்டது.

பின்னர் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், சார் ஆட்சியர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருநெல்வேலி எஸ்பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக முதல் முதலில் குற்றம்சாட்டிய சூர்யா என்பவர் பிறழ் சாட்சியான நிலையில், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்தான் தங்களை சித்தரவதை செய்து பல்லை உடைத்ததாக சில இளைஞர்கள் நேற்று(ஏப்.5) மதுரையில் பேட்டியளித்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அம்பாசமுத்திரம் தாலுகா சிவசக்தி நகரை சார்ந்த இளைஞர் அருண்குமார், "யூனிபார்ம் அணியாத இரு போலீசார் பின்னாலிருந்து இறுகப் பிடித்துக் கொண்டு, எனது கால்களை அவர்களது கால்களால் மிதித்துக் கொண்டார்கள். அப்போது ஏஎஸ்பி பல்வீர்சிங் என் முன்னால் வந்து, என்னை வாயைத் திறக்க சொன்னார். நான் திறக்கமாட்டேன் என்று வாயை இறுக்க மூடிக் கொண்டேன். இதனைப் பார்த்த பல்வீர்சிங், அவர் கையில் வைத்திருந்த கல்லால் எனது உதட்டில் ஓங்கி அடித்தார். நான் வலி தாங்க முடியாமல் அம்மா எனக் கத்தினேன். அப்போது வாயைத் திற என்று சொன்னார். நான் பயந்து கொண்டே வாயைத் திறந்தேன். உடனே அவர் தன் கையில் வைத்திருந்த கருங்கல்லை வைத்து பற்களிலும் ஈறுகளிலும் அழுத்தி தேய்த்தார்.

என்னால் வலி தாங்க முடியாமல், வாய்விட்டுக் கத்தக்கூட முடியாமல் அழுதேன். அப்போது எனக்கு உயிர் போகிற அளவிற்கு வலி ஏற்பட்டது. அதன் பின்பு எனது மேல்தாடையிலுள்ள பல்லை ஓங்கி ஓங்கி சுமார் 5 முறை அடித்தார். அப்போது நடுப்பல்லை ஒட்டியுள்ள இடதுபக்க முதல்பல் பாதி உடைந்தது. நான் வலி தாங்க முடியாமல் விடுங்க சார், விடுங்க சார் என்று கத்தினேன். நான் வலி தாங்க முடியாமல் வாயை மூடியபோதெல்லாம் உதட்டில் கல்லால் அடித்தார். இதனால், நான் வாயைத் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேல்பக்க பல் உடைந்த பின்பு கீழ்த்தாடையிலுள்ள பல்லில் கல்லை வைத்து தட்டி தட்டி உடைத்தார். இதனால் கீழ்பக்கம் உள்ள 3 பற்கள் பாதி உடைந்து கீழே விழுந்தது.

மீண்டும் ஏஎஸ்பி எனது வலது பக்க கீழ் பற்களில் கல்லை வைத்து தட்டினார். அதன் பின்பு இரண்டு பற்களும் நடுவே கல்லை வைத்து கடிக்க சொன்னார். நான் கல்லை கடிக்க மறுத்தபோது பின்னாலிருந்து லத்தியால் என் பிட்டம் மற்றும் பின்பக்க கால்களில் ஓங்கி ஓங்கி அடித்தார்கள். லத்தியால் அடித்ததால் வலி தாங்க முடியாததால் எனது வலது பக்க பல்லின் நடுவே கல்லை வைத்தபோது நான் அதைக் கடித்தேன். சுமன் 5 முறை திரும்ப திரும்ப கடிக்க சொன்னார்கள். நான் கடிக்க மறுத்தபோதெல்லாம் அடித்தார்கள். அதன் பின்பு பல்வீர்சிங், எனது பல்லை பலமுறை தனது கைகளால் ஆட்டி வெடுக்கென பிடுங்கி எடுத்துவிட்டார். அப்போது அம்மா என ஒங்கி சத்தி அலறினேன். அதன் பின்பு என்னை தனியாக உட்காரச் சொன்னார். ஏற்கனவே லத்தியால் அடித்ததால் இடுப்பு, பிட்டம் மற்றும் கால்களில் பயங்கர வலியாக இருந்தது. பல்லை தேய்த்து, அடித்து உடைத்ததால் கழுத்து, தலை, முகம் என அனைத்து பகுதிகளிலும் மிகவும் வலியாக இருந்தது" என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

அம்பாசமுத்திரம் அடையகருங்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கூறும்போது, "ஏஎஸ்பி பல்வீர் சிங் எதோ திட்டிக்கொண்டே சுமார் 5 அடி உயரமுள்ள லத்திக் கம்பை எடுத்து என் பின்பக்க தொடையில் ஓங்கி ஓங்கி பலமுறை அடித்தார். நான் வலிதாங்க முடியாமல் கதறினேன். சுமார் 10 நிமிடங்கள் விடாமல் தொடர்ச்சியாக அடித்தார். அதன் பின்னர் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகேசன், என் இரண்டு கைகளையும் நீட்டச் சொல்லி லத்தியால் ஓங்கி ஓங்கி பலமுறை அடித்தார். பின்னால் திரும்பி நிற்க சொல்லி பிட்டத்தில் அடித்தார்.

அதன் பின்னர் ஏஎஸ்பி பல்வீர் சிங் மேஜையில் இருந்த ஒரு கல்லை எடுத்து எனது வாயின் முன்புற உதடுகளை அகலமாக விரிக்கச் சொல்லி கற்களால் என் பற்களில் கடுமையாகத் தேய்த்தார். என் உதட்டில் கல் பட்டு சிராய்ப்பு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. எனது பற்கள் கூச ஆரம்பித்தது, பின்னர் அவர் பூட்ஸ் காலால் என் இடது பக்க நெஞ்சில் ஓங்கி மிதித்தார். நான் நிலைதடுமாறி கீழே விழுந்து வலியால் அலறினேன். எனக்கு நடந்த சித்திரவதைகளை, என் அண்ணன் அருண்குமார் உட்பட 6 பேரும் பயந்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த சம்பவம் சுமார் 2 மணி நேரம் நடந்தது" என்றார்.

இதையும் படிங்க: கைதிகள் பல் பிடுங்கிய விவகாரம்: போலீசார் கூண்டோடு மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.