ETV Bharat / state

நலம் நலம் அறிய ஆவல்.. காலம் கடந்த உணர்வுகளை சுமக்கும் கடிதங்கள்.. தேசிய அஞ்சல் தின சிறப்புத் தொகுப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 6:00 AM IST

Updated : Oct 10, 2023, 11:14 AM IST

இந்திய அஞ்சல் துறையின் மகத்தான வரலாறு
இந்திய அஞ்சல் துறையின் மகத்தான வரலாறு

National Postal Day: இந்திய அஞ்சல் துறை இன்று அக்டோபர் 10-ஆம் தேதி அன்று, தனது 170-ஆவது அஞ்சல் தினத்தைக் கொண்டாடுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு, தற்போது வரை இந்திய அஞ்சல் துறை ஆற்றிய மகத்தான பணிகள் குறித்து இந்த சிறப்புத் தொகுப்பு விவரிக்கிறது.

170வது அஞ்சல் தின சிறப்பு தொகுப்பு

மதுரை: தகவல் பரிமாற்றம் என்பது பண்டைய காலந்தொட்டு உலக மனிதர்களிடையே தவிர்க்க முடியாத சேவையாக இருந்து வருகிறது. ஓரிடத்தில் முரசு கொட்டியோ அல்லது பறை இசைத்தோ அரசாங்கத்தின் தகவல்களைத் தெரிவிப்பது மட்டுமன்றி, ஓரிடத்திலிருந்து தொலைவிலுள்ள மற்றொரு இடத்திற்கு தகவல்களைக் கொண்டு செல்ல, 'ஓட்ட தூதுவர்களை' பயன்படுத்தியது வரை இதன் வரலாறு மிக நீண்ட நெடியதாகும்.

இந்தியாவின் அஞ்சல் வரலாற்றை சிந்து சமவெளியிலிருந்து தொடங்கிய தொன்மைக் காலம், முகலாய மன்னர்கள் ஆட்சியின் போது தொடங்கிய இடைப்பட்ட காலம், ஆங்கிலேய ஆட்சியின் போது தொடங்கிய நவீன காலம் என மூன்றாகப் பிரிக்கலாம். ஆங்கிலேயருக்குப் பிறகு இந்திய அஞ்சல் துறை நவீனத்துடன் பல்வேறு மாற்றங்களைக் காணத்தொடங்கியது. மன்னர்கள் காலத்தில், தகவல்களைக் கொண்டு சென்றவர்கள் 'தகவலாளி', 'ஓட்டக்காரன்' அல்லது 'ஓட்டத் தூதுவன்' என அழைக்கப்பட்டனர்.

அஞ்சல் ஊழியர்களை பெருமைபடுத்திய 'ஹர்ஹரா' திரைப்படம்: கடிதங்கள் அடங்கிய சாக்குப் பைகளைக் தூக்கிக் கொண்டு ஓட்டமும், நடையுமாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தனர். அச்சமயம் விலங்குகளாலோ, கள்வர்களாலோ அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவர்களின் பாதுகாப்புக்காக கையில் வேல் ஏந்திச்சென்றனர். அண்மையில் வெளியான 'ஹர்ஹரா' என்ற தமிழ்ப்படத்தில் ஓட்டக்காரர்களையும், தபால்காரர்களையும் மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். புறாக்களின் கால்களில் ஓலைகளைக் கட்டி தூது அனுப்பிய வரலாறும் உண்டு.

கிராமங்களில் அதிரும் அஞ்சல் சேவை: உலகிலுள்ள பிற நாடுகளின் அஞ்சல் சேவைகளைக் காட்டிலும் மிகப் பெரிய வலை தொடர்பைக் கொண்டதுதான், இந்திய அஞ்சல் துறை. நாடு முழுவதும் 1 லட்சத்து 59 ஆயிரத்து 251 அஞ்சல் அலுவலகங்கள் உள்ளது. அவற்றில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 985-மும், நகர்ப்புறங்களில் 15 ஆயிரத்து 299- அஞ்சல் அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும் 808 தலைமை அஞ்சல் அலுவலகங்களும், 24 ஆயிரத்து 302 துணை அஞ்சல் நிலையங்களும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 141-கிளை அஞ்சல் அலுவலகங்கள் நாடு முழுவதும் இயங்குகின்றன.

வரலாற்று சிறப்பு பெற்ற அஞ்சல் துறை: இந்திய அஞ்சல் சேவை என்பது அதிகாரப்பூர்வமற்ற வகையில், கடந்த 4 நூற்றாண்டுகளுக்கு முன்பு 1727-இல் துவங்கியது. முதன் முதலாக கொல்கத்தாவில் ஆங்கிலேயர் காலத்தில் 1774ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் 1786-லும், மும்பையில் 1793-ஆம் ஆண்டும் அஞ்சல் சேவைகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் அஞ்சல் சேவையில் சீரான தன்மையைக் கொண்டு வரும் பொருட்டு, 1837-ஆம் ஆண்டு 'இந்திய அஞ்சல் சட்டம்' இயற்றப்பட்டது. மேலும் இந்த சட்டத்தை விரிவுபடுத்தி தற்போதைய நவீன அஞ்சல் சேவைக்கு வித்திடும் வகையில், 1854-ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டது.

இதற்கிடையே 1854-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி ரயில்வே அஞ்சல் துவங்கப்பட்டது. அதே ஆண்டில் கப்பல் அஞ்சல் சேவை முதன் முதலாக 1859ஆம் ஆண்டு கல்கத்தாவிலிருந்து போர்ட் பிளேர் வரை துவங்கப்பட்டது. அதன் பிறகு பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் கப்பல் மூலமாக அஞ்சல் சேவை நடைபெறத் தொடங்கின. பிப்ரவரி 18, 1911 அன்று உலகின் முதல் ஏர்மெயில் விமானம் கங்கை ஆற்றின் குறுக்கே 18 கி.மீ. தூரம் பயணித்து அலகாபாத்தில் இருந்து நைனிக்குச் சென்றது. 1898-ஆம் ஆண்டு பல புதிய சீர்திருத்தங்களோடு இந்திய அஞ்சல் சட்டம் அறிமுகமானது. இதைத் தொடர்ந்தே உலகம் முழுவதும் நூறு நாடுகளில் இந்திய அஞ்சல் துறை தனது சேவைகளை விரிவுபடுத்தியது.

சராசரியாக 8 ஆயிரத்து 627 பேருக்கு ஒரு அஞ்சல் நிலையமும், ஊரகப் பகுதிகளில் சராசரியாக 6 ஆயிரத்து 229 பேருக்கும், நகர்ப்புறங்களில் சராசரியாக 31 ஆயிரத்து 242 பேருக்கும் அஞ்சல் நிலையங்கள் சேவை புரிந்து வருகின்றன. ஒவ்வொரு அஞ்சல் நிலையங்களும் சராசரியாக 20.54 சதுர கி.மீ-ல் தங்களது சேவையை செய்து வருகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் 17 ஆயிரத்து 890 அஞ்சல் நிலையங்களும், மகாராஷ்டிரத்தில் 13 ஆயிரத்து 688 அஞ்சல் நிலையங்களும், தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 865 அஞ்சல் நிலையங்களைக் கொண்டு, இந்தியாவில் முதல் மூன்று இடங்களில் உள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரிவு அஞ்சல் துறையில் மொத்தம் 4 லட்சத்து 3 ஆயிரத்து 678 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 16.39% பட்டியல் சாதியினராகவும், 7.58% பட்டியல் பழங்குடியினத்தவராகவும் உள்ளனர். 32 ஆயிரத்து 328 பெண்கள் அஞ்சல் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர்.

சிண்டே டாக்ஸ் அஞ்சலின் அறிமுகம்: 1852-ஆம் ஆண்டு ஆசியாவிலேயே முதன்முதலில் ஒட்டக்கூடிய அஞ்சல்தலை சிந்து (சிண்டே) மாகாணத்தில் வெளியிடப்பட்டது. இவையே பின்னர் 'சிண்டே டாக்ஸ்' என்று அழைக்கப்பட்டன. சிண்டே டாக்ஸ் அஞ்சல் அறிமுகப்படுத்தப்பட்ட நாளான அக்டோபர் 10-ஆம் தேதி, 'தேசிய அஞ்சல் தினமாக' 1854-ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கிலேயரால் 1901-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல், 1 பென்னி மதிப்பில் அஞ்சல் தலை அஞ்சலகங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நாடு விடுதலையடைந்த பின்னர், 1947-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி இந்திய தேசியக் கொடியைக் கொண்ட முதல் அஞ்சல் தலை வெளியானது.

இந்த முத்திரைகள் ஜூன் 1866-ஆம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்தன. நாடு முழுவதும் செல்லுபடியாகும் முதல் தபால்தலை 1854-ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போதிருந்து, நாட்டின் தொலைதூர கிராமங்களை இணைப்பதன் மூலம் நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் அஞ்சல் துறை தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. இதுகுறித்து மதுரை தபால் தலை மற்றும் நாணயம் சேகரிப்போர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் துரை விஜயபாண்டியன் கூறுகையில், "நமது இந்திய அஞ்சல் துறை நம் வாழ்வியலோடு ஒன்றிணைந்து அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, தொழில் முறைகள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக முக்கிய பங்காற்றுகின்றது.

மேலும் நம் நாட்டின் தொழில் சார்ந்த எண்ணங்களை உலக நாடுகளிடம் எடுத்துச் சொல்வதோடு மட்டுமன்றி, அதன் மூலம் நம் நாட்டிற்கு பொருளாதார ஏற்றங்களையும், நம் நாட்டின் நிலைப்பாட்டினை உயர்த்தும் வகையிலும் சிறப்பாகச் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கும் பங்காற்றுகிறது. மேலும் நம் நாட்டின் அஞ்சல்துறை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒவ்வொரு விதமான அஞ்சல் தலைகளையும், சிறப்பு அஞ்சல் உறைகளையும், அஞ்சல் அட்டைகளையும் வெளியிட்டு இந்தியாவின் கலாச்சார, பண்பாட்டுப் பெருமைகளை உலக நாடுகள் அறியச் செய்வதிலும் அரிய சேவையைச் செய்கிறது.

வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பெருமையைப் பகிர்வதற்கு அஞ்சல்துறை வெளியிட்ட அஞ்சல் தலைகள் மிகச் சிறப்பு வாய்ந்தன. நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் அஞ்சல் தலைகளும், உறைகளும், அட்டைகளும் மதிப்பு மிக்கவை. இதில் கூடுதல் செய்தி என்னவென்றால், உலக அளவில் அதிக அஞ்சல் தலைகளில் இடம் பெற்ற ஒரே தலைவர் நமது மகாத்மா காந்திதான்" என்கிறார் துரை விஜயபாண்டியன்.

இந்திய அஞ்சல் துறையின் மதிப்புமிக்க சேவை: இந்திய அஞ்சல் துறை பரிமாற்றம், அஞ்சல் விநியோகம் மற்றும் பணம் அனுப்புதல் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டிருந்தாலும், வங்கி மற்றும் காப்பீட்டு சேவைகளை உள்ளடக்கிய சேவைகளையும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மேற்கொண்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பிப்ரவரி 2, 2006 அன்று தொடங்கப்பட்டதில் இருந்து, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், நாட்டின் தொலைதூர கிராமங்கள் மற்றும் அணுக முடியாத சிற்றூர்களிலும் கூட அஞ்சல் துறை தனது சேவைகளை வழங்கி வருகிறது.

புதிய டிஜிட்டல் சூழலின் சவால்களை எதிர்கொள்ள, தொடர்ந்து தன்னுடைய சேவைகளை மேம்படுத்தி, புதிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி வருகிறது. இந்நிலையில் 169 ஆண்டுகளை நிறைவு செய்து 170-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்திய அஞ்சல் துறை தனது தேசிய தினத்தைக் விரைவில் கொண்டாடவிருக்கிறது. இத்தனை ஆண்டுகள், இந்திய அஞ்சல் துறை ஆற்றிய மகத்தான சேவைகளில் ஒன்றுதான் 'போஸ்ட் கார்டு'. கடந்த 10 ஆண்டுகள் முன்பு வரை 'புரோமோட்டடு' என வகுப்புத் தேர்ச்சியை வெளிர் மஞ்சள் நிற அஞ்சல் அட்டை மூலம் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் அறிவித்ததெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறாகும்.

இது குறித்து மதுரை கோட்டத்தின் முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் கூறுகையில், "அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 13 தேதி வரை தேசிய அஞ்சல் வாரமாக கொண்டாடப்படுகிறது. 10 ஆம் தேதி, நிதி வலுவூட்டல் தினம், 11ஆம் தேதி தபால் தலை சேகரிப்பு தினம், 12ஆம் தேதி தபால் தினம் மற்றும் 13 ஆம் தேதி சாமனியர்களின் நலவாழ்வு சம்பந்தமாக அஞ்சல் துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அஞ்சல் நிலையங்களில் புதிதாக கணக்குகள் உருவாக்க, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சிகள் மதுரையில் உள்ள 3 தலைமை அஞ்சலகங்களிலும், 87 துணை அஞ்சலகங்களிலும், 243 கிளை அஞ்சலகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்கள் அஞ்சல் நிலையம் சார்பாகவும், துறை சார்பாகவும் அனைவருக்கும் அஞ்சல் தின வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மதுரை தல்லாகுளம், தலைமை அஞ்சல் அலுவலகத்தின் முதுநிலை அஞ்சல் அலுவலரான, மீனாட்சி கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 9-13 ஆம் தேதி வரை அஞ்சல் வாரமாக கொண்டாடிக் கொண்டு வருகிறோம். இந்த வாரம் ஒவ்வொரு அஞ்சல் ஊழியருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. அஞ்சல் துறையில் சேர்ந்து 20 வருடங்கள் கடந்த நிலையில், நான் முழுமையாக பணியாற்றியிருக்கேன்.

170 ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஞ்சல் துறையின் அம்சங்களை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். பொதுமக்கள் முழுமையாக பயன்பெறும் போதுதான், அரசு கொண்டு வரும் திட்டங்களும் முழுமை அடைகிறது. அஞ்சல் துறை வெறும் பார்சல் மற்றும் கடிதங்கள் அனுப்புவதற்கு மட்டும் இல்லை. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பல திட்டங்களும் உள்ளது. PLI, SMALL SAVINGS, CITIZEN CENTRIC, IPPB, AADHAR போன்ற மக்கள் பயன்பாட்டுக்கு உதவும் பல சேவைகள் இருக்கு.

இந்த அனைத்து திட்டங்களிலும் பொதுமக்கள் பயன்பெற வேண்டும். மக்களுக்கு சேவை செய்வதே எங்களின் தலையாய நோக்கமாக கருதி பணி செய்துக் கொண்டு வருகிறோம். எங்கள் சார்பில், நாட்டின் சக ஊழியர்களுக்கும், மக்களுக்கும் தேசிய அஞ்சல் தின வாழ்த்துக்கள்", எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய தபால்காரர் சண்முகப்பிரியா, "தபால்காரராக நான் 10 வருடமாக பணியாற்றி வருகிறேன். தபால்காரர் பணி என்பது சவால் நிறைந்த பணிதான், அதிலும் பெண் தபால்காரர் என்றால் கூடுதலாக சவால்கள் ஏற்படுகின்றன. வெயில், மழை என எல்லாக் காலங்களிலும் நாங்கள் பணியாற்றி இருக்கிறோம். இந்த சவால்களை கடந்து, மக்களை நேரடியாக சந்திப்பதனால் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

"அதிலும் முதியவர்களுக்கான உதவித் தொகையை கொடுக்கும் போது, அவுங்களுடைய ஒரு மாதத்துக்கான செலவுப்பணத்த நாங்க அவுங்ககிட்ட நேரடியா போய் கொடுக்கிறது நாள... அவங்க எங்களை தெய்வம் போல பாப்பாங்க. இந்த மாதிரி வேலையில் கிடைகிர மகிழ்ச்சி நிறைந்த தருணங்கள் எங்களுக்கு கூடுதல் உத்வேகத்த கொடுக்கும். இன்னும் சொல்ல போனா, கரோனா காலத்தில், மருத்துவத்துறைக்கு அடுத்தப்படியா, நாடு முழுவதும் உள்ள தபால்காரர்கள் தான் மக்கள நேரடியா சந்திச்சு, தேவைப்படுகின்ற மருந்து, உதவித்தொகை கொடுத்தோம்.

அந்த சமயத்துல பயத்தை கடந்து, எங்களுக்கும் குடும்பம் இருக்குனு மறந்து, இவங்களுக்கு இப்படி சேவை பண்ணத நாங்க பெருமையா பாக்குறோம். தபால்காரராக வேலை பாக்குறது முக்கியம இந்த யூனிஃபார்ம் போடறத நான் ரொம்ப பெருமையா பாக்குறேன்", என்று பெருமிதத்துடன் கூறினார் மதுரையில் தபால்காரராக பணியாற்றி வரும் சண்முகப்பிரியா.

அதைத் தொடர்ந்து பேசிய மற்றொரு தபால்காரரான சாந்தி, "கடந்த 2 வருடமா நான் தல்லாகுளம் போஸ்டு ஆபிஸ்-ல் நான் தபால்காரராக பணி செய்து வருகிறேன். அதன் முன்பு வரை 10 வருடமா நான் ஒரு கிராமத்துல BPM(Branch post master)-ஆ வேலை பாத்துட்டு இருந்தேன். அங்க நான் பார்சல் வருவது அதற்கான ரசீது சரி பார்த்தல், சேமிப்பு பண கணக்கு எழுதுவது இப்படியான வேலைகள மட்டும்தான் நான் பார்த்தேன்.

பின்பு தேர்வு எழுதி மதுரை தலைமை அஞ்சல் நிலையத்தில், தபால்காரராக பணிக்கு சேர்ந்தேன். இங்க வருவதற்கு முன்பு எனக்கு ஒரு சைக்கிள் கூட ஓட்டத்தெரியாது, ஆனா இப்போ மக்களுக்கான சேவை செய்யுற இடத்துல நான் இருக்கேன்ற கடமையினால நான் இரு சக்கர வாகனம் ஓட்ட கத்துகிட்டேன். இப்போ மக்களுக்கான சேவைய தொடர்ந்து பாத்துட்டு வருகிறேன்.

எங்க நிலையத்துல் மொத்தம் 18- பிரிவுகள் இருக்கிறது. அதில் 16பிரிவுகளில் போஸ்ட்விமண்(post women)வேலை பார்க்கின்றனர். இரண்டே இரண்டு பிரிவுகளில் போஸ்ட்மென்(postmen) வேலை பார்க்கிறார்கள். ஆண், பெண் என வேறுபாடுன்றி நாங்கள் பொது மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். இது எனக்கு மனமகிழ்ச்சி மற்றும் நிம்மதியை தருகிறது. இதற்கெல்லாம் காரணம் என் பணிதான்", என்கிறார் மற்றொரு தபால்காரரான சாந்தி.

நவீன வடிவங்கள் பல வந்தாலும்கூட, 4ஜி, 5ஜி நுழைய முடியாத இடத்தில்கூட இந்த தபால்காரர்கள் நுழைந்து சேவை புரிவதுதான் இந்திய அஞ்சல் துறையின் அழிக்க முடியாத வரலாற்று சாதனை. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ஆம் தேதி 'உலக அஞ்சல் தினம்' கொண்டாடப்படும். அதே வேளை, அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 10-ஆம் தேதி 'இந்திய அஞ்சல் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அஞ்சல் கொண்டு வந்து சேர்க்கும் நமது 'தபால்காரர்களை' வாழ்த்தி மகிழ்வோம்.

இதையும் படிங்க: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்கள் வென்று சாதனை.. பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து!

Last Updated :Oct 10, 2023, 11:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.