ETV Bharat / state

Madurai Train Fire Accident: வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்.. பூட்டப்பட்ட கதவுகள்.. அப்பட்டமான விதிமீறல்..?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 1:12 PM IST

Updated : Aug 26, 2023, 8:13 PM IST

Etv Bharat
Etv Bharat

Madurai Railway Station: மதுரையில் சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் இந்த தீ விபத்து நடந்தது எப்படி என்பதை நேரில் பார்த்த சாட்சியங்கள் விளக்குவதை கேட்கலாம். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு சிலிண்டர்கள் மூலம் சமைத்து சாப்பிட்டுக் கொண்டே பயணம் நிகழ்ந்துள்ளதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தீ விபத்து நடந்தது எப்படி?

மதுரை: மதுரை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று இன்று அதிகாலையில் தீடீரென தீப்பிடித்து எரிந்தது. ரயிலில் பற்றிய தீ அருகே இருந்த மற்றொரு ரயிலுக்கும் பரவிய நிலையில் துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்தினர். எரியும் ரயிலிலிருந்து பலரும் குதித்து உயிர் தப்பிய நிலையில், ஒருசிலர் ரயிலினுள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தில் வசிப்போர் காப்பாற்ற முயன்ற நிலையில், வெப்பம் காரணமாக ரயில்பெட்டியை நெருங்கக் கூட முடியவில்லை என்கிறார் மதுரையைச் சேர்ந்த மன்னன்.

நான் ரயிலில் தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகில் தான் குடியிருக்கிறேன் என கூறிய மன்னன். ரயிலில் தீப்பற்றியதுமே பெண்களின் சத்தம் கேட்டது. இதனால் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து பார்த்ததாகவும். அப்போது எரியும் ரயிலிலிருந்து சிலர் குதித்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் அருகில் உள்ள எஸ்.எஸ்.காலனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினருடன் , பொதுமக்களும் இணைந்து தீயை அணைக்க போராடினோம்.

கொழுந்து விட்டு எரிந்த தீயால் எங்களால் ரயிலை நெருங்கக் கூட முடியவில்லை என கூறினார். ஸ்லீப்பர் பெட்டிகளில் மேலே படுத்திருந்தவர்கள் தான் பெரும்பாலும் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர் என்றும் அவர் கூறினார். இதற்குள்ளாக ரயில்வே துறையினர், போலீசார், தீயணைப்புத்துறையினர் என எல்லோருமே வந்துவிட்டனர். எளிதில் எரியக் கூடிய பொருட்களை கொண்டு வந்ததுதான் விபத்துக்கு காரணம் என கூறிய மன்னன், 90 சதவீதம் மக்கள் இறங்கிவிட்டதாகவும், வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே சிக்கிக் கொண்டதாகவும் கூறினார்.

இதே போன்று தீவிபத்தில் தனது மனைவியை பறி கொடுத்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷிவ் பிரதாப் சிங் சவுகான் என்ற பயணி, தங்களின் உறவினர்களை அடையாளம் காண அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார். எரியும் நெருப்பிலிருந்து 5 பேரை தான் போராடி காப்பாற்றியதாகவும் ஆனால் தனது மனைவி மிதிலேஷ் குமாரி மற்றும் மைத்துனர் சத்ருக்கனன் சிங் ஆகியோரை தன்னால் காப்பாற்ற முடியவில்லை என அவர் வருத்தத்துடன் கூறினார். புகை அதிகமானதால் சுவாசிக்க முடியாமல் தான் மயங்கி விழுந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே விபத்து நிகழ்ந்த இடத்தில் உதவும் பணியில் ஈடுபட்ட செல்லதுரை என்பவர் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், சடலங்களை மீட்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டதாக கூறினார். உயிர் தப்பியவர்களிடம் பேசுகையில் சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்த பசின் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனமே எரிவாயு சிலிண்டர்களையும் ஏற்பாடு செய்து வழங்கியிருந்ததாகவும், 16 கிலோ எடையுடைய 2 சிலிண்டர்களை அவர்கள் கொண்டு வந்ததாகவும் கூறினார். ரயில் தீப்பிடித்த போது சிலர் கதவுகளை மூடிவிட்டதாகவும் இதனாலேயே வெளியேற முடியாமல் சிக்க நேரிட்டதாக கூறினார். எமர்ஜன்சி ஜன்னல் மூலமாக சிலர் உயிர் தப்பியதாக தம்மிடம் கூறியதாகவும் செல்லதுரை கூறினார்.

  • MADURAI JUNCTION FIRE INCIDENT : HELP LINE NUMBERS

    The following two help line numbers are provided at the site to share the information related to the
    fire incident and causalities
    9360552608
    8015681915

    — Southern Railway (@GMSRailway) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

விபத்து தொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், அதிகாலை 3.47 மணிக்கு இந்த ரயில் மதுரை வந்தடைந்ததாகவும், 5.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, 5.45 மணிக்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின் காலை 7.15 மணிக்கு முழுவதுமாக தீ அணைக்கப்பட்டது வேறு எந்த பெட்டியிலும் தீ பரவவில்லை என ரயில்வே கூறியுள்ளது.

இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டரை பற்ற வைத்ததாலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பல பயணிகள் தீப்பற்றியது அறிந்ததும் குதித்து உயிர் தப்பிவிட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா ரயில் லக்னோவிலிருந்து ஆகஸ்ட் 17ம் தேதி தனது பயணத்தை துவங்கியுள்ளது. பல்வேறு இடங்களிலும் தங்கள் பயணத்தை முடித்த பின்னர் நாளை கொல்லம் -எக்மோர் அனந்தபுரி ரயில் (T.no. 16824) மூலமாக சென்னை திரும்பவும், பின்னர் அங்கிருந்து லக்னோ செல்லவும் திட்டமிடப்பட்டிருந்தது. எந்த ஒரு தனிநபரும் ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்த தனி சுற்றுலா பெட்டிகளை முன்பதிவு செய்யலாம். ஆனால் தீப்பற்றக் கூடிய பொருட்களை ஒரு போதும் எடுத்துச் செல்லக் கூடாது என ரயில்வே கூறியுள்ளது.

தீ விபத்து தொடர்பான தகவல்களை பெறுவதற்காக உதவி எண்களையும் ரயில்வே அறிவித்துள்ளது. 9360552608 மற்றும் 8015681915 ஆகிய இரு செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், எஸ்எஸ் காலனி காவல் நிலைய போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த 9 பேரில் 6 நபர்களை மட்டுமே அடையாளம் காண முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி பரமேஸ்வர் டயத் குப்தா, தாமன்சிங் சந்துரு, ஹேமன் பன்வால், நிதிஷ் குமோரி, சாந்தி தேவி, மனோ வர்மா அகர் ஆகியோரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 3 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளன. 2 ஆண் சடலம் மற்றும் ஒரு பெண் சடலத்தை அடையாளம் காண இயலவில்லை. காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு நிலவரத்தை கேட்டறிந்தனர். மேலும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து காயம் அடைந்த சக பயணிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.

  • மதுரை இரயில் நிலையத்தில் சுற்றுலா இரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/y4tovghNpC

    — CMOTamilNadu (@CMOTamilnadu) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியிட்டுள்ள அறிக்கையில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக கூறினார். உயிரிழந்தோரின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மதுரையில் சுற்றுலா ரயிலில் நிகழ்ந்த தீ விபத்தில் 9 பேர் பலி: விபத்துக்கான காரணம் என்ன?

Last Updated :Aug 26, 2023, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.