ETV Bharat / state

"பரனூர் டோல்கேட் இனி பா.ஜ.க மாடல் டோல்கேட்" - விளாசிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 3:30 PM IST

பரனூர் டோல்கேட் இனி "பா.ஜ.க மாடல் டோல் கேட்" - விலாசிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன்!
madurai-mp-su-venkatesan-statement-against-bjp-tollgate-scam

Paranur tollgate scam: சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ள உலக மகா டோல் கேட் ஊழலான பரனூர் டோல்கேட்டை இனி பா.ஜ.க மாடல் டோல் கேட் என அழைக்கலாம் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை: 'சி.ஏ.ஜி' அறிக்கை அம்பலப்படுத்தியுள்ள உலக மகா டோல் கேட் ஊழலான பரனூர் டோல் கேட்டை இனி பா.ஜ.க மாடல் டோல் கேட் என அழைக்கலாம் என மதுரை நாடளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய பா.ஜ.க அரசின் ஏழு ஊழல்களைப் பற்றி பேசியுள்ள சி.ஏ.ஜி அறிக்கை ஒரு பெரும் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது. அதில் முக்கியமான ஒன்று 'டோல் கேட் ஊழல்'(toll gate scam). டோல் கேட்டுகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று பொதுப் பணத்தில் அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள டோல் கேட்டுகள் (Public Funded Toll Gates). இரண்டாவது வகை, தனியார் பணத்தில் அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள டோல் கேட்டுகள். (BOT toll gates).

செங்கல்பட்டு - பரனூர் டோல் கேட் அதிகமான வாகனங்கள் கடந்து செல்லும் பொதுப் பணத்தில் அமைக்கப்பட்ட சாலையை கொண்ட டோல் கேட் ஆகும். அதன் வழியாக ஆகஸ்ட் 2019லிருந்து ஜூன் 2020 வரையிலான காலத்தில் 1,17,08,438 வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. ஒரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் என்பது மலைக்க வைக்கும் எண்ணிக்கை. ஆனால், அதை விட மலைக்க வைக்கிற தகவலை சி.ஏ.ஜி அறிக்கை தருகிறது. அவற்றில் 62,37,152 வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாமல் போன வி.ஐ.பி வாகனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

  • செங்கல்பட்டு - பரனூர் டோல் கேட்டில் ஓராண்டில் ஒரு கோடியே 12 லட்சம் வாகனங்கள் சென்றுள்ளது.

    இதில் 62 லட்சம் வாகனங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்தாத வி ஐ பி வாகனங்கள் என்று கணக்கு எழுதப்பட்டுள்ளது.

    நவீனஊழலின் அடையாளமான பரனூர் டோல்கேட்டை இனி “பா ஜ க மாடல் டோல்கேட்” என்றே அழைக்கலாம். pic.twitter.com/sfzWQLrapD

    — Su Venkatesan MP (@SuVe4Madurai) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பரனூர் டோல் கேட் மட்டுமல்ல. பொதுப் பணத்தில் அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள மற்ற டோல் கேட்டுகளிலும் இதுதான் நிலைமை, ஆத்தூர் டோல் கேட்டில் 36% வி.ஐ.பி வாகனங்கள் இலவசமாக சென்றுள்ளன. ஜனவரி 2020 முதல் செப் 2020 வரையிலான காலத்தில் கப்பலூர் டோல் கேட் 25% வி.ஐ.பி வாகனங்கள் இலவசமாக சென்றுள்ளன. லம்பாலகுடி டோல் கேட்டில் 18% வி.ஜ.வி வாகனங்கள் இலவசமாக சென்றுள்ளன.

தனியார் டோல் கேட்டுகளில் இந்த கணக்கு தலை கீழாக உள்ளது. செங்குறிச்சி டோல் கேட்டும் சென்னை சாலையில் தான் உளுந்தூர் பேட்டை அருகில் உள்ளது. அங்கே ஜனவரி 2020 முதல் செப் 2020 வரை கடந்து சென்ற வாகனங்கள் 49,77,901 ஆகும். அவற்றில் கட்டணம் கட்டாத விஐபி வாகனங்கள் 12.60% அதே போல் கணியூர் டோல் கேட் 11.12%. வேலன் செட்டியூர் டோல் கேட் 7.13%. பாளையம் டோல் கேட் 6.93%. வைகுண்டம் டோல் கேட் 6.76%. கொடை ரோடு டோல் கேட் 6.06% மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுப்பணத்தில் அமைக்கப்பட்ட சாலையான பரனூர் டோல்கேட்டில் 53% விஐபிகள் பயணம் செய்து இருக்கிறார்கள். அதுவே தனியார் பணத்தில் அமைக்கப்பட்ட கொடைரோடு டோல்கேட்டில் 6% தான் விஐபிகள் பயணம் செய்கிறார்கள். என்றால் எவ்வளவு பெரிய திருட்டுத்தனம் அரங்கேறி இருக்கின்றன.

சி.ஏ.ஜி அறிக்கை இன்னொரு குண்டை போட்டு இருக்கிறது. விஐபி சென்றார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் சேகரிக்கப்படவில்லை. பதிவுகள் கூட செய்யப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஜூலை 2021இல் விளக்கம் தந்துள்ளது. இந்த பொதுப் பண டோல் கேட்டுகளில் தனியார் முகவர்கள் தான் வசூல் பொறுப்பை ஏற்றுள்ளார்கள், வசூல் இடர் எல்லாம் அவர்களின் மொத்த பொறுப்பு, ஆகையால் அரசுக்கு இழப்பு ஏதுமில்லை என்பதே அந்த விளக்கம். எனவே, விஐபி வாகனம் பற்றி சொல்லப்பட்டுள்ள விளக்கம் ஏற்கத் தக்கதல்ல என்று சி.ஏ.ஜி அறிக்கையே திருப்பி அடித்துள்ளது.

பொதுப் பண டோல் கேட்டுகள் மற்றும் தனியார் டோல் கேட்டுகள் இரண்டிற்கும் விதிகள் ஒன்று தான். விதிகளை நிறைவேற்றுகிறார்களா என்பதை பார்க்க வேண்டிய பொறுப்பு நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு இல்லையா? அரசுக்கு இழப்பு இல்லை என்பது உண்மையா? வாங்கி விட்டு மறைத்தார்களா? வருவாய் வாய்ப்புகளை வைத்துதானே தனியார்களுக்கு வசூல் பொறுப்பு ஒப்படைக்கப்படும்! அப்படி என்றால் எத்தனை மடங்கு தொகையை இவர்கள் வாரிசுருட்டி உள்ளனர்.

இன்னொரு சுவாரசியமும் உண்டு. 11.09.1956க்கு பின்னால் கட்டப்பட்ட பாலங்களில் செல்வதற்குத் தான் டோல் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் 1954 இல் கட்டப்பட்ட பரனூர் டோல் கேட் பாலம் ஒன்றின் வழி பயணத்திற்கு 2018 - 2021ல் 22.10 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. பரனூர் டோல்கேட் சி.ஏ.ஜி அறிக்கையால் பலவகையிலும் வரலாற்று சிறப்பு மிக்க டோல் கேட்டாக மாறியுள்ளது. உலகத்திலேயே 50% விஐபிகள் பயணம் செய்யும் பெருமை கொண்ட பரனூர் டோல் கேட்டை நவீன ஊழலின் அடையாளமாக 'பா.ஜ.க மாடல் டோல்கேட்' என்றே அழைக்கலாம்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சாட்டையை சுழற்றும் நீதிமன்றம், சிக்கலில் அமைச்சர்கள்! நீதிமன்ற வாசலுக்கு படையெடுக்கும் அவலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.