ETV Bharat / state

மதுரை விமான நிலையத்திற்கு 24×7 தொழில் பாதுகாப்புப்படை: அமைச்சரின் பதிலில் ஏமாற்றம்

author img

By

Published : Dec 15, 2022, 6:40 PM IST

சு வெங்கடேசன்
சு வெங்கடேசன்

மதுரை விமான நிலையத்திற்கு 24 மணி நேரமும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்தும் வகையில் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சிவில் விமானப்போக்குவரத்து இணை அமைச்சர் அளித்த பதில் ஏமாற்றம் அளித்ததாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை: இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “மதுரை விமான நிலையத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கை போதாமையால் கூடுதல் விமானங்களை இயக்க முடியவில்லை. இதனால் வெளி நாடுகளுக்கான விமானங்கள் மதுரைக்கு வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இங்கு வர வேண்டிய வாய்ப்புகள் வேறு விமான நிலையங்களுக்கு சென்று விடுகின்றன.

ஆகவே, சிஐஎஸ்எப் படை வீரர்கள் கூடுதலாக மூன்றாவது பணி நேரத்திற்கு நியமனம் செய்யப்பட வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கையை நானும், தென் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதுரை தொழில் வர்த்தக சபையினரும் முன் வைத்து வருகிறோம். மதுரையை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வருகிறோம். இதுகுறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்வி (எண் 1499/15.12.2022) எழுப்பி இருந்தேன்.

அதற்குப் பதில் அளித்த ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங், 'இப்போதைக்கு இந்திய தொழில் பாதுகாப்புப் படை எண்ணிக்கையை அதிகரிக்கும் உத்தேசம் இல்லை. மொத்தப் பணியிடங்கள் 268, அவற்றில் நிரப்பப்பட்டு இருப்பது 263. விமானங்கள் காலை 7.15-லிருந்து இரவு 8 மணி வரைதான் இயக்கப்படுகின்றன. கூடுதல் விமானங்கள் இந்த நேரத்தைக் கடந்து இயக்கப்பட்டால் கூடுதல் தொழில் பாதுகாப்பு படை வழங்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வி. கே.சிங்
அமைச்சர் வி. கே.சிங்

''ஏமாற்றம் அளிக்கிறது'': அமைச்சரின் பதில் தலை கீழாக இருக்கிறது. இரவு விமானங்கள் இல்லையே என்றால் இந்திய தொழில் பாதுகாப்பு படை போதவில்லை என்பதும், தொழில் பாதுகாப்புப் படையை கூடுதலாக கேட்டால் கூடுதல் விமானங்கள் வந்தால் தருகிறோம் என்பதும் போகாத ஊருக்கு வழி சொல்வது போல இருக்கிறது. மத்திய, தென் தமிழ்நாட்டில் உள்ள 14 மாவட்டங்களுக்கு பயன் அளித்து வரும் மதுரை விமான நிலையம் சம்பந்தப்பட்ட இக்கோரிக்கை இப்படி தொடர்ந்து புறம் தள்ளப்படுகிறது.

இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மதுரை - தூத்துக்குடி தொழில் வளப் பாதையும் வலுப்பெறும். தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு காட்டும் பாரபட்சத்தின் நீட்சியாகவே இந்த கோரிக்கையை ஏற்க மறுப்பதும் உள்ளது. ஆனால், மதுரை வளர்ச்சிக்கான எங்கள் குரல் ஓயாமல் ஒலிக்கும். மதுரை மக்களின் கருத்தையும் திரட்டி ஒன்றிய அரசை நிச்சயம் ஏற்க வைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் - 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.