ETV Bharat / state

தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு!

author img

By

Published : Jul 22, 2023, 10:47 PM IST

தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு!
தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு!

2020 ஆம் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு முறையான நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்ற அவமதிப்பு செய்த தற்போது தலைமைச் செயலாளராக உள்ள சிவதாஸ் மீனாவை நேரில் ஆஜராகும் படி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தற்போது தலைமைச் செயலாளராக உள்ள சிவதாஸ் மீனா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் அய்யனார் முருகன். இவர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதி பஞ்சாயத்து நிர்வாக இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் அவரை பணியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்து தனக்கு வழங்க வேண்டிய உரிய பணி உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் 2016 ஆம் ஆண்டு ராஜேஷ் அய்யனார் முருகன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அவருக்கு பணி வழங்கி, பணி நீக்கம் செய்யப்பட்ட இடைப்பட்ட காலத்திற்கு 25 விழுக்காடு ஊதியம் வழங்க வேண்டும் என 2020ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டிலும் அவருக்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவு தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பட்டு தேவானந் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி , “மனுதாரருக்கு 2021 ஆம் ஆண்டு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேலை செய்யாத காலத்திற்கான 25 விழுக்காடு பண பலன்கள் வழங்கப்படவில்லை.

இந்த வழக்கில் மூத்த அதிகாரி எதிர்மனுதாரராக இருந்தும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தற்போது வரை எந்த வித பதில் மனுவோ விளக்கமோ அளிக்கப்படவில்லை. இதிலிருந்து நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது ஆச்சரியமாகவும் விசித்திரமாகவும் உள்ளது” என கூறினார்.

மேலும் அவர், “இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரனைக்கு வருவது அறிந்து கடந்த 17 ஆம் தேதியன்று அரசு தரப்பில் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டு விட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் முடிவை நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டே உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. ஆனால் கடந்த 10 ஆம் ஆண்டு தான் நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஆகும்” என கூறினார்.

எனவே இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள அப்போதைய நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், தற்போது தமிழக தலைமை செயலாளராக உள்ள சிவதாஸ் மீனா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: பதவி உயர்வில் இடஒதுக்கீடு - சமூகநீதிக்கு துணை நிற்போம் என உச்சநீதிமன்றம் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.