ETV Bharat / state

தேனி வனத்துறை துப்பாக்கிச் சூடு சம்பவம்; காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 8:20 AM IST

தேனி வனத்துறை துப்பாக்கி சூடு சம்பவம்
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Theni farmer Shot dead: வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த முதியவர் தொடர்பான வழக்கு குறித்து, காவல்துறை விரிவான பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த வினோதினி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எனது தந்தையான ஈஸ்வரன் விவசாய கூலி வேலை செய்பவர். கம்பம் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தோட்டத்தில் கடந்த 5 வருடங்களாக தண்ணீர் பாய்ச்சும் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், அதே பகுதியில் வனக்காவலராக பணிபுரியும் திருமுருகன் மற்றும் பிச்சை ஆகியோர் எனது அப்பா ஈஸ்வரனை அடிக்கடி வனப்பகுதிக்கு மரக்கன்று நடுவதற்கு மற்றும் இதர வேலைக்கும் அழைத்து செல்வார்கள். மேலும், திருமுருகன் மற்றும் பிச்சை மூலமாக வனச்சரகர் முரளிதரன், பீட் காப்பாளர் ஜார்ஜ் என்ற பென்னிக்குட்டி, வன காப்பாளர் பிரபு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களான கமன், ஈஸ்வரன், கார்த்திக், சந்தனகுமார் ஆகியோரும் எனது அப்பாவிற்கு அறிமுகமாகி, அவருடன் நெருங்கிப் பழகி வந்தனர்.

அதனையடுத்து, வனக்காவலர்களுக்கும், வன அலுவலர்களுக்கும், வேட்டை தடுப்பு காவலர்களுக்கும், உணவு மற்றும் அன்றாட தேவைக்கான இதர பொருட்கள் வாங்கி வருவதற்கு உதவியாக எனது அப்பா இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வனக்காவலர்கள் மற்றும் அலுவலர்கள் மது அருந்திக் கொண்டிருந்த எனது அப்பாவிடம், உல்லாசமாக இருப்பதற்கு பெண்களை அழைத்து வா என்று தகாத முறையில் பேசியதால் தகராறு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, எனது அப்பா ஈஸ்வரன், வனத்துறையினரோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. இருப்பினும், வனக்காவலர் திருமுருகன் மற்றும் வன அலுவலர்கள் எனது அப்பாவை நேரில் வந்து வேலை செய்ய வருமாறு வற்புறுத்தினார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவருக்கு மிரட்டல் விடுத்தனர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 28ஆம் தேதி முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு, வனக்காவலர் திருமுருகன் மற்றும் அவருடன் பணிபுரியும் பிச்சை, முரளிதரன், ஜார்ஜ் , பிரபு, சுமன், ஈஸ்வரன், கார்த்திக், சந்தனகுமார் ஆகியோர்கள் கூட்டாக சேர்ந்து தோட்டத்தில் வழக்கம்போல தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவரை மிரட்டி, வனப்பகுதிக்குள் அடித்து இழுத்துச் சென்று, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டார்கள்.

இதனையடுத்து, தற்காப்புக்காக சுட்டதாக பொய்யாக எனது தந்தை மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனது தந்தைக்கு மிகப்பெரிய அநியாயம் நடந்து உள்ளது. வனக்காவலர்கள் சதித்திட்டம் தீட்டி எனது தந்தையைக் கொலை செய்துள்ளனர். திட்டமிட்டு எனது தந்தை ஈஸ்வரனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வனக்காவலர்கள், வனத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், மனுதாரர் தரப்பில், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யவில்லை. வனக்காவலர்கள் மற்றும் வனத்துறையினர் திட்டமிட்டு பொய்யான முறையில் குற்றம் சாட்டி, துப்பாக்கிச்சூடு நடத்தி ஈஸ்வரனை கொலை செய்துள்ளனர் என வாதிட்டனர். அதனைத் தொடர்ந்து, அரசுத் தரப்பில் மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, தற்போது வரை நடைபெற்ற மாஜிஸ்திரேட்டு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், காவல்துறை தரப்பில் விரிவான பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: கேரளா செவிலியருக்கு ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை.. மேல் முறையீட்டு மனு நிராகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.