ETV Bharat / state

தளக்காவயல் வரத்துக் கால்வாய் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 6:56 PM IST

Thalakkavayal Varathu Canal
தளக்காவயல் வரத்துக் கால்வாய் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை

Thalakkavayal Varathu Canal: தேவகோட்டை தளக்காவயல் வரத்துக் கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து திடக்கழிவு மேலாண்மை கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணதாசன் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அதில், “சிவகங்கை மற்றும் தேவகோட்டையைச் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு தளக்காவயல் வரத்துக் கால்வாய் வழியாக விருச்சுளி ஆறு மூலம் தண்ணீர் செல்கிறது.

இந்த நிலையில், தேவகோட்டை நகராட்சி தளக்காவயல் வரத்துக் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளை, திடக்கழிவு மற்றும் நகராட்சியில் சேமிக்கப்படும் திடக்கழிவு குப்பைகளைக் கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், நகராட்சி சார்பில் குப்பைக் கிடங்கு நிரந்தரமாக அமைக்கும் பணியை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. நகராட்சியின் இந்த செயல், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிப்போடு, நீர்வரத்து கால்வாயை அழிக்கும் செயலாக உள்ளது.

இதன் காரணமாக கிராமசபைக் கூட்டத்தில் இங்கு குப்பைக்கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், பஞ்சாயத்து தலைவர் என அணைத்து அரசுத் துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்தும், இதுவரை எந்த பதிலும், நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், தேவகோட்டை தளக்காவயல் வரத்துக் கால்வாய் அருகில் எந்த விதிகளையும் பின்பற்றாமல் விவசாயிகளை, நீர்வரத்து கால்வாய்களைப் பாதிக்கும் வகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அவசர நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, திடக்கழிவுகள் மற்றும் குப்பைகளைக் கொட்டுவதற்கு அமைக்கப்படும் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தளக்காவயல் வரத்துக் கால்வாய் என்பது இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த நிலையில், இங்கு திடக்கழிவு மேலாண்மை தொட்டியைக் கட்டினால் கால்வாய் பாதிக்கப்படும் என தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், தளக்காவயல் வரத்துக் கால்வாய் பகுதியில் கட்டுமானப் பணிக்கு இடைக்கால தடை விதித்தும், மனு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் மணிமுத்தாறு நீர்வளப் பொறியாளர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: பொன்முடிக்கு வந்த புது சோதனை! சொத்துக்கள் முடக்கத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவு! முழுத் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.