ETV Bharat / state

பொன்முடிக்கு வந்த புது சோதனை! சொத்துக்கள் முடக்கத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவு! முழுத் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 12:50 PM IST

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்து முடக்க விவகாரம்
Former minister Ponmudi property freeze issue

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துக்களை, புதிதாக உத்தரவு பிறப்பிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை: கடந்த 2006 - 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக, 2011ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

மேல்முறையீடு ஏன்?

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பொன்முடி தரப்பில், "மனைவியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டு உள்ளதாகவும், பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்ததாகவும், இவற்றை விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்ட காலகட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை எனவும் வாதிடப்பட்டது.

இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், டிச.21ஆம் தேதி தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், "பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியின் வருமானத்தை தனித்தனியாக கணக்கிட்டு, இரண்டு பேர் வருமானத்தையும் சேர்த்து விசாரணை செய்யாமல், சிறப்பு நீதிமன்றம் தவறு செய்துள்ளது" என தெரிவித்தது.

மேலும், 2006- 11ஆம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 72 லட்சத்து 63 ஆயிரத்து 468 ரூபாய், அதாவது வருமானத்தை விட 64.90 சவீதத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்துள்ளது நிரூபணமாகி உள்ளதால், இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

சொத்துக்கள் முடக்கம்?

இந்நிலையில், பொன்முடியின் சொத்துக்கள் முடக்கப்பட்டதை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, லஞ்ச ஒழிப்புத்துறை 2016ல் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று (டிச. 22) தீர்ப்பளித்த நீதிபதி, "பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

அதனால், புதிதாக உத்தரவு பிறப்பிப்பது உகந்ததாக இருக்காது. சொத்துக்களை முடக்குவதாக இருந்தால், சட்டத்திற்கு உட்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை, சிறப்பு நீதிமன்றத்தை அணுகி மீண்டும் நடவடிக்கை எடுக்கலாம்" என தீர்ப்பளித்தார். இதனால், மீண்டும் சொத்துக்கள் முடக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு - புதுவை பாஜக எம்.எல்.ஏ விடுதலை - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.