ETV Bharat / state

சாத்தன்குளம் தந்தை மகன் கொலை வழக்கு; ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 9:11 PM IST

சாத்தன்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு
சாத்தன்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு

Sathankulam double murder: சாத்தன்குளத்தில் காவல் நிலையத்தில் விசாரணையின்போது தந்தை-மகன் உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோரை சிபிஐ காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை முதலாவது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து தந்தை மகன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 9 காவல் துறையினர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேல் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் 104 சாட்சிகளில் இதுவரை 46 சாட்சிகளுக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”இந்த வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். தந்தை, மகன் இறப்புக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சிரமப்பட்டு வருவதானால், தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். எனவே, தனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று (செப்.15) விசாரணைக்கு வந்த நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ, ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் அரசுத்தரப்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளங்கோவன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனுவை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு; இருவருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.