ETV Bharat / state

வனப்பகுதிக்குள் தனி நபர்கள் எவ்வாறு அனுமதிக்கப் படுகிறார்கள்? - நீதிபதிகள் கேள்வி

author img

By

Published : Oct 20, 2022, 10:51 PM IST

வனப்பகுதிக்குள் தனி நபர்கள் எவ்வாறு அனுமதிக்கப் படுகிறார்கள் நீதிபதிகள் கேள்வி
வனப்பகுதிக்குள் தனி நபர்கள் எவ்வாறு அனுமதிக்கப் படுகிறார்கள் நீதிபதிகள் கேள்வி

ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலய வழக்கில், வனப்பகுதிக்குள் தனி நபர்கள் எவ்வாறு அனுமதிக்கப் படுகிறார்கள்? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்

மதுரை: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,

"விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் வடக்கே ஆண்டிப்பட்டி மலைகள், தெற்கே திருநெல்வேலி மாவட்டம், கிழக்கே ராஜபாளையம் நகர் பகுதி மற்றும் மேற்கில் தேனி பகுதிகளை எல்லைகளாக கொண்டுள்ளது.

இந்த சரணாலயத்தில் வங்காளப் புலிகள், யானைகள், பறக்கும் அணில்கள், இந்திய ராட்சத அணில்கள், சிறுத்தை, நீலகிரி லங்கூர், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி மற்றும் காட்டுப் பூனைகள் போன்ற பல்வேறு அரிய வகை விலங்குகள் வாழ்கின்றன. மேலும் இதே வனப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கட்டழகர் கோயில் உள்ளது.

இந்த கோயிலுக்கு ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்றும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய செல்கின்றனர். அப்படி செல்லக்கூடிய பொதுமக்கள் வனத்துறையிடம் உரிய அனுமதியின்றி கோயிலில் தங்குகின்றனர்.

மேலும் வனப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கும் விதமாக அசுத்தம் செய்கின்றனர் இதனால் வனவிலங்குகளும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனவிலங்கு சரணாலயத்திற்குள் அமைந்துள்ள கோவிலுக்கு பொதுமக்கள் செல்வதை வரைமுறை செய்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வனப்பகுதிக்குள் தனி நபர்கள் எவ்வாறு அனுமதிக்கப் படுகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.

அரசு தரப்பில், வனப்பகுதியில் அமைந்துள்ள கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் வனப் பகுதிக்குள் கோயில் அமைந்துள்ளதால், அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறையுடன் அனுமதி பெற்றுச் செல்வதாகத் தெரிவித்தனர்.

மனுதாரர் தரப்பில், வனப்பகுதிக்குள் வாகனங்களைக் கொண்டு செல்ல கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. இங்கு சட்டவிரோதமாகச் செல்பவர்கள், அரிய வகை வனவிலங்குகள், பறவைகள் போன்றவற்றை வேட்டையாடுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டிற்கு தகுந்த சாட்சியங்கள் உள்ளதா என கேள்வி எழுப்பினார். மேலும் மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கை நவம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: தகுதி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீட்டிப்பா..? கண்டித்த உயர்நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.