ETV Bharat / state

சாத்தான்குளம் கொலை வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனுவை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 6:02 PM IST

Etv Bharat
Etv Bharat

sathankulam custodial death case: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் மனு மீதான விசாரணையை, தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து நீதிபதி கே.முரளிசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோரை சிபிஐ போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு மதுரை முதலாவது நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "இந்த வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். தந்தை, மகன் இறப்புக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சிரமப்பட்டு வருகிறேன். எனவே எனக்கு பிணை வழங்கி உத்தர விட வேண்டும் கேட்டு கொள்கிறேன்" என அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.முரளிசங்கர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "கைது செய்யப்பட்தில் இருந்து ஜாமின் கிடைக்காமல் உள்ளனர். சட்டபடி இவர்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும். குறுப்பிட்ட காலத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், பல முறை கால நீட்டிப்பு பெற்று உள்ளனர். தற்போது புதிதாக சாட்சியை சேர்த்து விசாரிக்கின்றனர். எனவே காலதாமதம் செய்து கொண்டிருக்கின்றனர். எனவே மனுதாரருக்கு ஜாமின் வழங்க வேண்டும்" என கூறினார்.

அப்போது CBI தரப்பு மற்றும் இடையீட்டு மனுதாரர் வழக்கறிஞர்கள், "இந்த வழக்கை விசாரிக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சமீபத்தில் தான் நீதிபதி, நியமனம் செய்யப்பட்டு உள்ளார். எனவே 3 மாதத்தில் இந்த வழக்கு விசாரணை முடிந்து விடும். சிசிடிவி காட்சிகளுக்காக ஒரு சாட்சியை சேர்த்து உள்ளோம், எனவே உயர்நீதிமன்ற உத்தரவுபடி 3 மாதத்தில் முடித்து விடுவோம். எனவே ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என கூறினார். இதனை தொடர்ந்து நீதிபதி கே.முரளிசங்கர், இந்த வழக்கில் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல், வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கச்சத்தீவு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.