ETV Bharat / state

கச்சத்தீவு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 3:48 PM IST

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Kachchatheevu recovery case: கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கில், மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மதுரை: சென்னையைச் சேர்ந்த பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்தீவு ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. பின்னர் இந்தியா மற்றும் இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த உடன்படிக்கையில் பாரம்பரியமாக மீன் பிடிப்பு தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எந்த இடையூறும் செய்யக்கூடாது என குறிப்பிடப்பட்டு உள்ளது. 1983 முதல் 2005 வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி (RTI- Right to information Act) தகவல் உள்ளது. மேலும், இதுவரை தமிழக மீனவர்கள் பல கோடி ரூபாய் மதிப்பு உள்ள படகுகளை இழந்துள்ளனர்.

அதன் பின்பு 2013ஆம் ஆண்டு 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த 19.06.2023-இல் 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 21.06.2023ஆம் தேதி 22 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

1974ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையை இலங்கை கடற்படையினர் மீறி உள்ளனர். எனவே, இடைக்கால உத்தரவாக 22 மீனவர்களை இந்தியா கொண்டு வர உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும், 1974ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை என இரு நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கையை ரத்து செய்து கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி கங்க பூர்வாலா மற்றும் நீதிபதி குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், கச்சத்தீவு மீட்பு விவகாரம் என்பது மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு என்றும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறியும் வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: நியோமேக்ஸ் நிதி மோசடி விவகாரம்: வழக்கை தள்ளிவைத்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.