ETV Bharat / state

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை - பாடம் புகட்டிய நீதிபதி!

author img

By

Published : Aug 3, 2023, 9:52 AM IST

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் யாதவ்க்கு 2 வார சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக்கல்வித்துறையின் (அப்போதைய 2019 ஆண்டு) செயலாளர் பிரதீப் யாதவ் IAS, இரண்டு வார சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது. மேலும் இரண்டு கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி வரும் 9 ஆம் தேதி உயர்நீதிமன்ற பதிவாளர் இடம் ஆஜராகவும்,
அபராதமாக ரூபாய் 1000 விதித்தும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் கல்வித்துறை சார்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அதில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கடந்த 2019 ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை.

இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஞானபிரகாசம், கடந்த 2020 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இது சம்பந்தமாக அப்போதைய கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் (தற்போது இவர் நெடுஞ்சாலைத்துறை உயர் செயலாளராக உள்ளார்) மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஐஏஎஸ். அதிகாரி பிரதீப் யாதவ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆஜரானார்கள். அவர்களிடம், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, 'நீதிமன்றம் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற பல வாய்ப்பு கொடுத்தும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை.

ஒரு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு எது சரி? எது தவறு? என்று தீவிர ஆலோசனைக்குப் பின்பு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒவ்வொரு வழக்கிலும் உத்தரவுகளை பிறப்பிக்கின்றது. ஆனால், அந்த உத்தரவுகளை செயல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு கட்டளையிடப்படுகிறது. ஆனால் அந்த உத்தரவுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்துவது இல்லை.

நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் என்று அதிருப்தி தெரிவித்தார். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு, அதற்கு எதிரான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுவதை ஏற்க இயலாது என்று கடும் கண்டனம் தெரிவித்து விசாரணையை ஒத்தி வைத்து இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று அதே நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில் நீதிபதி, “மனுதாரர் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தாதது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு காரணமான அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அதிகாரி செயலாளர் பிரதீப் யாதவ், ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குநர் முத்து பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பூபாலா ஆன்டோ ஆகிய 3 பேருக்கும் 2 வாரம் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

அபராதத்தை செலுத்தாவிட்டால் கூடுதலாக மூன்று நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவர்கள் 3 பேரும் வருகிற 9 ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் சரண் அடைய வேண்டும்” என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: பேட்டரியால் இயங்கு குப்பை வண்டிகள் எத்தனை உள்ளது? - மதுரை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.