ETV Bharat / state

பேட்டரியால் இயங்கு குப்பை வண்டிகள் எத்தனை உள்ளது? - மதுரை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

author img

By

Published : Aug 2, 2023, 9:40 AM IST

Updated : Aug 2, 2023, 10:03 AM IST

பேட்டரியால் இயங்கும் குப்பை வண்டிகள் குறித்து விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பேட்டரியால் இயங்கும் குப்பை வண்டிகள் குறித்து விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற போதிய அளவில் பேட்டரி வாகனங்களை இயக்க உத்தரவிட கோரி வழக்கில் மாநகராட்சியில் எத்தனை குப்பை வண்டிகள் பேட்டரியில் இயங்குகிறது அதன் நிலை என்ன என்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்க மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

மதுரை: மதுரை சேர்ந்த மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், மதுரை மாநகராட்சி பகுதிகள் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன்பு மொத்தம் 72 வார்டுகள் இருந்தன. கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு விரைவாக சேவை அளிக்கும் நோக்கத்துடன் மாநகராட்சி 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு மற்றும் மதுரை மத்தியம் என பெயரிடப்பட்டு உள்ளது.

மதுரை மாநகராட்சியில் 6 முக்கிய துறைகளான பொறியியல், நகரமைப்பு, பொது சுகாதாரம், கணினிப்பிரிவு, வரிவசூல் உள்ளிட்ட துறைகள் நகராட்சி பணிகளை மேற்கொள்கின்றன. மதுரை மாநகராட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணிகளுக்காக பேட்டரி மூலம் இயங்கும் 509 வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த பேட்டரியில் இயங்கும் ஒரு வாகனத்தின் விலை 1 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயாகும்.

509 பேட்டரியில் இயங்கும் வாகனங்களில் 250 வாகனங்கள் மாநகரட்சியால் முழுமையான நிதி கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டு உள்ளது. 9 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 259 வாகனங்கள் ஸ்வச் பாரத் (Swachh Bharat) திட்டத்தின் கீழ் நிதி கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள் மூலம் மதுரை மாநகரில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கப்பட்டு, மாநகராட்சி குடியிருப்பாளர்களுக்கு நீலம் மற்றும் பச்சை குப்பைத் தொட்டிகள் விநியோகம் செய்யப்பட்டது.

ஆனால் கடந்த சில நாட்களாக மதுரை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க கையால் இயக்கப்படும் ரிக்சா வண்டிகளை பயன்படுத்தி வருகின்றனர். பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் குறித்து விசாரித்த போது, ​​பெரும்பாலான பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வேலை செய்யும் நிலையில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல்களை பெற்றதில், பேட்டரியில் இயங்கும் 509 வாகனங்களில், 257 வாகனங்கள் பழுதுடைந்து உள்ளது தெரிய வந்துள்ளது. இதனை சரி செய்ய 4 கோடியே 57 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவாகும். பேட்டரி வாகனங்கள் பழுது காரணமாக துப்பரவு பணியாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெண் துப்பரவு பணியாளர்கள் மூன்று சக்கர இழுவை வண்டிகளை இழுத்துச் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே பழுதாகியுள்ள வாகனங்களை சரிசெய்யவும், 509 பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் செயல்படுகிதா என்பதை உறுதிப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 5 மண்டலங்களிலும் பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு ஒரு பராமரிப்பு பிரிவு அமைக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு பகுதியிலும் குப்பைகளை சேகரிக்க போதிய அளவில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என உத்தரவிட கோரி தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தர் மற்றும் வரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை மாநகராட்சியில் எத்தனை குப்பை வண்டிகள் பேட்டரியில் இயங்குகிறது. அதன் நிலை என்ன என்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு: மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு 2 வாரம் சிறை தண்டனை!

Last Updated :Aug 2, 2023, 10:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.