ஈடிவி பாரத் செய்தி எதிரொலி - EWS நடைமுறையை வாபஸ் பெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழகம்!

author img

By

Published : Jun 13, 2022, 4:51 PM IST

madurai kamaraj university

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், முது அறிவியல் உயிரி தொழில்நுட்பப் படிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட EWS இடஒதுக்கீட்டு முறையை திரும்பப்பெற்று, தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுவதாக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் முது அறிவியல் உயிரி தொழில்நுட்ப படிப்பை (MSC., Bio Technology), ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதி உதவியின்கீழ் நடத்தி வருகிறது. இந்தியாவிலேயே ஜேஎன்யூ உள்ளிட்ட ஐந்து முக்கிய பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இந்தப் படிப்புக்கு ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது.

ஆண்டுதோறும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 30 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு 2022-2023ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையின் பொருட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க பல்கலைக்கழக இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த விண்ணப்பத்தில் புதிதாக சிறப்புப் பிரிவின் அடிப்படையில் பொருளாதாரத்தில் நலிவுற்றோர் என்ற பிரிவும் சேர்க்கப்பட்டிருந்தது.

ஆன்லைன் விண்ணப்பத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான பிரிவு
ஆன்லைன் விண்ணப்பத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான பிரிவு

இதுகுறித்து நமது ஈடிவி பாரத் கடந்த ஜூன் 11ஆம் தேதி, பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் முனைவர் சங்கரின் மேற்கோளுடன் செய்தி வெளியிட்டிருந்தது. இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று, பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இன்று காலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனும் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறைச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டுக்கொள்கையின் அடிப்படையிலேயே முது அறிவியல் உயிரி தொழில்நுட்பப் படிப்பிற்கான சேர்க்கை நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.

EWS நடைமுறையை வாபஸ் பெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
EWS நடைமுறையை வாபஸ் பெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

இந்த அடிப்படையில் மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள சீட்டுகளில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 8 சீட்டுகளும், தாழ்த்தப்பட்டோருக்கு 5 சீட்டுகளும், பழங்குடியின மாணவர்களுக்கு 2 சீட்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சீட்டும், பொதுப்பிரிவில் 14 சீட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

EWS நடைமுறையை வாபஸ் பெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
EWS நடைமுறையை வாபஸ் பெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

இது குறித்து அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் விக்கி கண்ணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். மாநில நிர்வாகத்தின்கீழ் இயங்கும் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாநில அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறையில்தான் செயல்பட வேண்டும் என்பதை முதலமைச்சரும், உயர் கல்வித்துறை அமைச்சரும் இந்த நேரத்தில் உத்தரவிட வேண்டும் என்பதை எங்களது வேண்டுகோளாகவும் வைக்கிறோம்” என்றார்.

அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் விக்கி கண்ணன்
அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர், விக்கி கண்ணன்

இதையும் படிங்க: EWS அடிப்படையில் நுழைவுத்தேர்வா...? - சர்ச்சையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.