ETV Bharat / city

EWS அடிப்படையில் நுழைவுத்தேர்வா...? - சர்ச்சையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

author img

By

Published : Jun 11, 2022, 10:31 PM IST

Updated : Jun 13, 2022, 3:49 PM IST

EWS Reservation in Msc Bio technology in in Madurai Kamaraj University
EWS Reservation in Msc Bio technology in in Madurai Kamaraj University

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கான எம்.எஸ்சி உயிரி தொழில் நுட்பவியல் (Bio Technology) படிப்பில் சேருவதற்கான தகுதிகளில், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் என்ற மாநிலக் கல்வி முறையில் ஏற்கப்படாத புதிய வகைப்பாட்டை விண்ணப்பத்தில் இணைத்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் எம்.எஸ்சி உயிரி தொழில்நுட்பவியல் (Bio - Technology) படிப்பிற்கான 2022-23ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 30 சீட்டுகள் மட்டுமே உள்ள இந்தப் படிப்பிற்கு 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தின் 16ஆவது பிரிவில் சிறப்பு வகைப்பாட்டின் கீழ் பொருளாதாரத்தில் நலிவுற்றோர், மாற்றுத்திறனாளிகள், பொருந்தாது என மூன்று உட்பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

விண்ணப்பத்தில் EWS: மேலும் விண்ணப்பத்தின் கீழ் பகுதியில், பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான (Economically Weaker Section) 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக உரிய வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவுற்றோர் என்ற இட ஒதுக்கீட்டு பிரிவு தமிழ்நாட்டின் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கல்வியாளர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

EWS Reservation in Msc Bio technology in in Madurai Kamaraj University
ஆன்லைன் விண்ணப்பத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான பிரிவு

தமிழ்நாட்டில் இல்லாத EWS: இதுகுறித்து அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் விக்கி கண்ணன் நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறுகையில், "கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் இரண்டு முதுகலைப் படிப்பிற்கான விண்ணப்ப படிவங்களில் பொருளாதாரத்தின் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறிப்பிடப்பட்டிருந்தது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீட்டு முறை தமிழ்நாட்டில் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை.

நீக்கப்பட்ட EWS பிரிவு: மாநில அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகத்தில் இந்த இட ஒதுக்கீடு முறை ஏன் அமல்படுத்தப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு, பிறகு அண்ணா பல்கலைக்கழக விண்ணப்பத்திலிருந்து அக்குறிப்பிட்ட பிரிவு நீக்கப்பட்டது. அண்ணா பல்கலை.,யின் இந்த நிலைப்பாட்டை அன்றைய உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் எதிர்த்து பேட்டியும் அளித்தார்.

இதையும் படிங்க: மதுரை காமராசர் பல்கலைக்கழகமா..? அல்லது கார்ப்பரேட் நிறுவனமா..? - பல்கலைக்கழக பாதுகாப்பு குழு கேள்வி

புதிய கல்விக் கொள்கையின் நீட்சியா?...: இந்த சூழலில், தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான பிரிவைக் குறிப்பிட்டு ஆன்லைன் விண்ணப்பம் வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அண்மையில் ஆளுநர் நடத்திய துணைவேந்தர்கள் மாநாட்டில் இதுகுறித்து பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

EWS அடிப்படையில் நுழைவுத்தேர்வா...? - சர்ச்சையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

அமைச்சர் தலையிட வேண்டும்: அதன் தொடர்ச்சியாகவே, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தி இருக்கிறார்களோ என சந்தேகம் ஏற்படுகிறது. தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலையிட்டு அதனை வாபஸ் பெற வேண்டும்" என்றார்.

பல்கலைக்கழகம் விளக்கம்: இந்த சர்ச்சை குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் எம்.எஸ்சி உயிரி தொழில்நுட்பவியல் துறை தலைவரும், பேராசிரியருமான சங்கரிடம் நாம் தொலைபேசி வழியாக விளக்கம் கேட்டபோது, "கடந்த 1983ஆம் ஆண்டிலிருந்து இந்தத் துறை ஒன்றிய அரசின் உதவியோடு இயங்கி வருகிறது.

வெளிமாநிலத்தவரே அதிகம்: ஜேஎன்யூ உள்ளிட்ட இந்தியாவின் 5 பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசு இந்தப் படிப்பை அனுமதித்துள்ளது. ஆண்டிற்கு 30 சீட் என்ற அடிப்படையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டாலும், இதில் தமிழ்நாடு மாணவர்களின் பங்கேற்பு வெகு குறைவாகவே இருந்து வந்தது. அதிகபட்சமாக ஓராண்டில் 3 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். பிற சீட்டுகள் அனைத்தும் வெளி மாநிலத்தவர்களுக்கே பயன்பட்டு வந்தன.

ஒன்றிய அரசின் படிப்புக்கு மட்டும்!: இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமே பயோ டெக்னாலஜி படிப்பை நேரடியாகத் தொடங்கி, நடத்தியது. இதில், தமிழ்நாடு மாணவர்களுக்காக 20 சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பயோ டெக்னாலஜி துறை நிதி உதவியின் கீழ், இந்தப் படிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதால் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் பல்கலைக்கழகம் நேரடியாக தமிழ்நாடு மாணவர்களுக்காக நடத்துகின்ற படிப்பில் மாநில இடஒதுக்கீடு முறையில்தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது" என்றார்.

இதையும் படிங்க: நடுத்தெருவில் நிற்கவா இத்தனை ஆண்டுகள் பணி செய்தோம்..? மதுரை காமராஜர் பல்கலைக்கழக தற்காலிகப் பணியாளர்கள் குமுறல்

மேலும் அவர் கூறுகையில், "தமிழ்நாடு மாணவர்களுக்கான சீட் எண்ணிக்கையையும் 30 ஆக அதிகரிக்கத் தேவையுள்ளது என்றாலும், 50 மாணவர்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளே உள்ள காரணத்தால் அதனைச் செய்ய முடியவில்லை. அதற்கான வசதிகளை மேற்கொண்ட பிறகு பல்கலைக்கழகம் தமிழ்நாடு மாணவர்களுக்கு மேலும் தேவையான சீட்டைப் பெற்றுத் தரும்' என்றார்.

EWS சர்ச்சை நீங்குமா?: சமூக நீதி மண் என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் தமிழ்நாட்டில் ஆண்டாண்டு காலமாக வகுப்பு ரீதியாக 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு கொண்டுவந்த பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உள்ளது. இதனால், மாநில அரசின் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டை பெற்றிருப்பது சர்ச்சைக்குரியதாகி உள்ளது.

இதையும் படிங்க: கருத்துரிமையை பறிக்கும் காமராஜர் பல்கலைக்கழகம் - பதிவாளரின் சுற்றறிக்கைக்கு கண்டனம்...!

Last Updated :Jun 13, 2022, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.