ETV Bharat / state

‘கோடநாடு கொலை வழக்கு சிந்துபாத் கதை போல தொடரும்’ - எடப்பாடி பழனிசாமி!

author img

By

Published : Apr 23, 2023, 10:40 PM IST

Etv Bharat மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி
Etv Bharat மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி

கோடநாடு கொலை வழக்கு சிந்துபாத் கதை போல் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி

மதுரை மற்றும் விருதுநகர் நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவரிடம் தமிழ்நாடு அரசு சட்டசபையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றியது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “தொழிலதிபர்களுக்கு அரசு அடிமை சாசனம் எழுதி உள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளேன். 8 மணி நேரம் வேலை இருந்தால் தான் ஊழியர்கள் பணி செய்ய முடியும். அவர்கள் ஒன்றும் இயந்திரம் அல்ல 12 மணி நேரம் வேலை செய்ய முடியாது. இந்த சட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும்போது அதை எதிர்த்தார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலை ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலை இதுதான் ஸ்டாலினுடைய பண்பாடாக உள்ளது. சட்டசபையில் காவல்துறை பற்றி பேசினேன் 2 மணி நேரம் பேசிய விவகாரம் எந்த ஊடகத்திலும் பத்திரிகைகளிலும் செய்தி வரக்கூடாது என மிரட்டி தடுத்துள்ளார்கள். காவல்துறை என்பது முக்கியமான துறை காவல் துறை சரியாக இருந்தால் தான் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

இது ஜனநாயக நாடு யாரைக் கண்டும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை பத்திரிகைகளும் ஊடகங்களும் நடுநிலையோடு செய்தி ஒளிபரப்புங்கள் நாட்டு மக்களுடைய நிலைமையை ஆதாரத்துடன் சட்டசபையில் பேசினேன் அதையும் ஒளிபரப்புங்கள். தன்னிடம் இருந்த ஐபேடில் எடப்பாடி பழனிச்சாமி ஒளிபரப்பு செய்தார். முப்பதாயிரம் கோடி ஊழல் என்பது உண்மைதான் இது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய பேச்சில் இருந்தே தெரிகிறது.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநரிடம் வலியுறுத்துவோம். நிதி அமைச்சரே பேசி உள்ளதால் அது உண்மையானதா? போலியானதா? என ஆய்வு செய்து விசாரணை செய்ய வேண்டுமென தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுத்தார்கள். அதே போல் இந்த விஷயத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இரண்டு ஆண்டுகளிலேயே இவ்வளவு கொள்ளையடித்துள்ளார்கள் இன்னும் மூன்று ஆண்டுகளில் எவ்வளவு கொள்ளை அடிப்பார்கள் இருக்கின்ற பணம் எல்லாம் அவர்களிடம் தான் இருக்கும் எனவே அரசு இதனுடைய உண்மை தன்மையை ஆராய வேண்டும் நியாயமான தலைவர் என்றால் வலைதளத்தில் வந்த இந்த செய்தி குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, ஓபிஎஸ் அதிமுக கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்தி திருச்சியில் மாநாடு நடத்துவது தொடர்பான கேள்விக்கு,
“அதிமுக எங்கள் தரப்பில் உள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையமும் தெளிவான தீர்ப்பு வழங்கி உள்ளது. பத்திரிக்கை மற்றும் செய்திகள் வழியாக வந்திருக்கிறது. ஆனால் பத்திரிகையில் இரட்டை இலை சின்னத்தையும் கொடியையும் விளம்பரம் செய்வது எந்த விதத்தில் நியாயம். இந்த விவகாரம் தொடர்பாக தலைமை குழு ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம்” என்றார்.

கோடநாடு கொலை வழக்கு குறித்து முதலமைச்சர் ஆவேசமாக பேசியது தொடர்பான கேள்விக்கு, “அதிமுக கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததால் விரக்தியின் விளிம்பிற்கு முதலமைச்சர் சென்று விட்டார். கோடநாடு சம்பவம் அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. கைது செய்ததும் அதிமுக தான். கரோனா காலம் என்பதால் நீதிமன்றங்கள் செயல்படவில்லை இதனால் வழக்கில் சற்று தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் இவர்களுக்கு ஜாமீன் கொடுக்க உதவியவர்கள் யார்? என்று பார்த்தால் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் தான். கொடும் குற்றம் புரிந்தவர்களுக்கு ஜாமீன் தாரராக உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு திமுக வழக்கறிஞரே வாதாடி இருக்கிறார். இது குறித்து விசாரணை அறிக்கை இன்னும் வெளியே வரவில்லை குற்றவாளிகளுக்கு ஏன் இவ்வளவு கரிசனம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த வழக்கில் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தார்கள் ஏதாவது சொத்து வாங்கி இருக்கிறார்களா? என ஒன்றும் சிக்கவில்லை முப்பதாயிரம் கோடி சொத்து அவர்களிடம் தான் உள்ளது” என தெரிவித்தார்.

மேலும், “காவல் துறையில் பல்வேறு உயரதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்துள்ளார்கள். இந்த வழக்கு இன்னும் ஐந்தாண்டுகளுக்கு சிந்துபாத் கதை போல் தொடரும் எனக் கூறியவர் அதிமுக ஆட்சி வந்தவுடன் கோடநாடு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என தெரிவித்தார்.

அதிமுக பாஜக கூட்டணி குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, “அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக நிர்ணயம் செய்யக் கூடியவர்கள் அமித்ஷா மற்றும் பாஜக மேல் இட பொறுப்பாளர்கள் தான். எனவே, அதை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டாம் மேலே பாஸ் இருக்கும்போது கீழே இருப்பவர்கள் எதற்கு? அமித்ஷா, நட்டா ஆகியோர் உத்தரவு தான். ஏற்கனவே கடந்த தேர்தலில் இருந்து பேசி உள்ளோம். எப்போதும் அவர்களிடம் தான் பேசுவோம்” என்றார்.

இதையும் படிங்க: 12 மணி நேர வேலை மசோதா: விக்கிரமராஜாவின் வரவேற்பும், எதிர்ப்பும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.