ETV Bharat / state

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோரிய மனு.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 10:53 PM IST

Etv Bharat
Etv Bharat

Madurai AIIMS: எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக 36 மாதங்கள் கால நிர்ணயம் செய்யப்பட்ட பின்பும் இன்று வரை கட்டிடப் பணிகளை முடிக்காதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எழுப்பிய நிலையில், இப்பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் முடிவு எடுக்கப்படும் என ஒன்றிய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத ஒன்றிய அரசின் பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் பி.கே.மிஷ்ரா, ஒன்றிய அரசின் நிதித்துறை செயலாளர் ஸ்ரீதருண் பாலாஜி, ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கோரிய மனு விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்து ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் இப்பணிகள் தொடங்கப்படும் என ஒன்றிய அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 2019-ல் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு விசாரணையின் போது, மத்திய அரசு 36 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என தெரிவித்து இருந்தது. அதனடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 27 பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிவைத்தார்.

ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் 36 மாதங்களில் மருத்துவமனை பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோரி மனு: ஆனால் நீதிமன்றத்தில் கூறப்பட்டது போல், பணிகள் எதுவும் தொடங்காததால், மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத ஒன்றிய அரசின் பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் பி.கே.மிஷ்ரா, ஒன்றிய அரசின் நிதித்துறை செயலாளர் ஸ்ரீதருண் பாலாஜி, ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், புகழேந்தி ஆகியோர் அமர்வில் இன்று (அக்.16) விசாரணைக்கு வந்தது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு முடிவு செய்வது இறுதி கட்ட நிலையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து, கட்டுமானப் பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படும் என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை: எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக 36 மாதங்கள் கால நிர்ணயம் செய்யப்பட்டும் இன்று வரை கட்டி முடிக்காதது ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். இதனைத்தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் கரோனா காலத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை எனக் கூறப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடங்கப்பட்டது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், மனுதாரர் கூறியதை பதிவு செய்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: கருகிய பயிரை டிராக்டர் கொண்டு அழிக்கும் விவசாயி! காவிரி தண்ணீர் இல்லாததால் அவலம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.