ETV Bharat / state

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

author img

By

Published : Jun 28, 2023, 1:06 PM IST

Updated : Jul 4, 2023, 12:10 PM IST

Etv Bharat
Etv Bharat

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா வானதிராயன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளின் அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக அவர் இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக 15 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்தனர்.

பின்னர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அவரை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது திடீர் நெஞ்சு வலி காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28ஆம் தேதி (இன்று) வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து அவரிடம் இருந்த மின்சாரத் துறையும், மதுவிலக்கு துறையும் மற்ற இரு அமைச்சர்களான தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அவர் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர முடியாது என முதலமைச்சர் வைத்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்தார்.

இந்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது செந்தில் பாலாஜி, இலாகா எதுவும் இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் நீடிக்க தடை விதித்தும், அந்த பதவியில் இருந்து அவரை நீக்கியும் உத்தரவிட வேண்டும்" என கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதனுடன் தொடர்புடைய வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், இந்த வழக்கையும் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். ஏற்கனவே அதிமுகவினர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என ஆளுநர் எங்கு சொல்லியிருக்கிறார்? - உயர் நீதிமன்றம் கேள்வி!

Last Updated :Jul 4, 2023, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.