ETV Bharat / state

சர்வேயருக்கு எவ்வளவு லஞ்சம் தர வேண்டும்..? அரசுக்கு கடிதம் எழுதிய ஆர்டிஐ ஆர்வலர் - வீடியோ வைரல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 7:49 AM IST

a-social-activist-has-accused-government-officials-of-asking-for-bribes
அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் ஆர்டிஐ ஆர்வலரின் வீடியோ

பட்டாவில் உள்ள தவறைச் சரி செய்ய அரசு அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் தர வேண்டும்? என அரசு தெரிவித்தால் பிச்சை எடுத்தாவது அடைத்து விடுவேன் என ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் ஆர்டிஐ ஆர்வலரின் வீடியோ

மதுரை: வீட்டுமனை பட்டாவில் உள்ள தவறைச் சரி செய்ய கடந்த 4 ஆண்டுகளாகப் போராடி வரும் ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் , நில அளவையர் உள்ளிட்ட துறை சார்ந்த பிற நபர்களுக்கு எவ்வளவு லஞ்சம் தர வேண்டும்? என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து, வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் அ.ராமகிருஷ்ணன். இவர் ஒரு ஆர்டிஐ ஆர்வலர். தகவல் உரிமைச் சட்டத்தின் மூலமாக பல்வேறு விஷயங்களை வெளிக் கொண்டு வருபவராக அறியப்படுகிறார். இதற்காக பல்வேறு தரப்பில் இருந்தும் மிரட்டல்களைச் சந்தித்து வருவதாக கூறுகிறார்.

இந்நிலையில், தனது வீட்டிற்கான பட்டா வரைபடத்தில் திருத்தம் மேற்கொள்ள போடி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். இருப்பினும் கடந்த நான்கு ஆண்டுகளாக கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதற்கு குற்றம்சாட்டி அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "எனது வீட்டினுடைய பட்டா வரைபடத்தில் தவறு இருந்ததால் அதனை சரி செய்யக்கோரி போடி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தேன். அதற்கு நீண்ட நாட்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் கேட்ட பணத்தை லஞ்சமாகக் கொடுக்காததால், எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதற்காக பலமுறை சீராய்வு மனுவும் தாக்கல் செய்தேன். அதற்குப் பிறகு மாவட்ட நில நிர்வாக அலுவலகம் வரைபடத்தில் தவறு இருப்பதை கண்டறிந்து அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஜமாபந்தியில் தவறாக பதிவு செய்துள்ள புல வரைபடத்தை மாற்றம் செய்யக்கோரி விண்ணப்பம் செய்திருந்தேன். கடந்த 5 மாதங்களாக அதற்கும் எந்தவித நடவடிக்கை இல்லை.

ஆக கடந்த 4 ஆண்டுகளாக பட்டாவில் மேற்கொள்ள வேண்டிய சிறு தவறை சரி செய்து கொடுக்க மாவட்ட நில அளவைத் துறை தயாராக இல்லை. மேலும் அக்குறிப்பிட்ட நில அளவையருக்கு லஞ்சம் கொடுக்காத காரணத்தால், கடுமையாக அலைக்கழிப்பு செய்து வருகிறார். இனிமேலும் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. இந்தத் தவறை சரி செய்ய இயலாத காரணத்தால் என் மீது ஒரு குற்ற வழக்கும்கூட உள்ளது.

ஆகையால், நில அளவையர் உட்பட பிறர் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என எனக்குத் தெரிவிக்கும் பட்சத்தில் அதனைப் பிச்சையெடுத்தாவது தருவதற்குத் தயாராக உள்ளேன். அருள்கூர்ந்து எவ்வளவு தொகை தர வேண்டும் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும்.

மேலும் தமிழக முதல்வர் மக்கள் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். அவ்வாறு இருந்தும் இதுபோன்ற அதிகாரிகளால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர்தான் ஏற்படுகிறது. மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் களத்தில் இறங்கியும் போராடுவேன் என்று கூறிய தமிழக முதல்வர், இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு தர வேண்டும்" என தெரிவித்து உள்ளார். மேலும் தனக்கு நீதி வேண்டி தமிழக ஆளுநருக்கும் பதிவு அஞ்சலில் மனு அளித்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: மனைவியை விவாகரத்து செய்த சச்சின் பைலட்; வேட்புமனுவில் வெளியான விவகாரம்.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.