ETV Bharat / state

"அன்னைக்கு எங்க வீடுகளில் கஞ்சி மட்டும்தான்" 60 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத விநோத கிராமங்கள்.. சிவகங்கையில் நடப்பது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 10:24 PM IST

தீபாவளி பண்டிகையை கொண்டாடாத விநோத கிராமங்களின் கதை
தீபாவளி பண்டிகையை கொண்டாடாத விநோத கிராமங்களின் கதை

Sivagangai No diwali village: கொண்டாட்டத்திற்கு பெயர்போன பண்டிகையான தீபாவளியை, முன்னோரின் வாக்குக்காக 60 ஆண்டுகளாக புறக்கணிக்கும் கிராம மக்களின் விநோத காரணத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு.

60 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத கிராமங்கள்

சிவகங்கை: தீபாவளி என்றவுடன் உற்சாகத் துள்ளல்களோடு அதனை எதிர்கொண்டு காத்திருப்பது நம்முடைய இயல்பு. பட்டாசு, பலகாரம், புத்தாடை, சினிமா போன்ற பல்வேறு கொண்டாட்டங்கள் நிறைந்த காலத்தில் வாழ்கிறோம். மரபுகள் கடந்து முற்றிலும் இளைஞர்களின் விழாவாகவே மாறி இருக்கின்ற இன்றைய நவீன தீபாவளி கொண்டாட்டக் காலத்தில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீபாவளியைப் புறக்கணித்து, கொண்டாட்டத்தின் எந்த சுவடும் இல்லாமல் வாழ்கின்ற கிராமங்கள் இருக்கின்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா..?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகே 12 கி.மீ. தொலைவில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள், தீபாவளிக்கான எந்தவித ஆர்ப்பாட்டமோ, கொண்டாட்டமோ இன்றி அந்த நாளை, வழக்கமான மற்றொரு நாளாகக் கடந்து செல்வதோடு, அன்றைய தினம் இட்லி உண்பது கூட கொண்டாட்டமாக மாறிவிடும் என்று எண்ணி, வெறும் கஞ்சி வைத்துச் சாப்பிடுகின்ற இந்த மக்களின் உணர்வுதான் நம்மை மலைப்பில் ஆழ்த்துகிறது.

இது குறித்து அப்பகுதி பொது மக்களிடம் கேட்டபோது, பொதுவாக பல்வேறு கிராமங்களில் ஐப்பசி மாதம் என்பது விவசாயப் பணிகள் நடைபெறும் காலம் என்பதால் இந்தக் காலகட்டங்களில் அவர்களின் கவனம் முழுவதும் உழவை நோக்கித்தான் இருக்கும். அதுபோலவே செலவுகளும் சற்று அதிகமாக இருக்கும் என்பதால், அச்சமயம் வருகின்ற தீபாவளி போன்ற செலவு பிடிக்கும் திருவிழாக்கள் அவர்களுக்குக் கூடுதல் சுமையாகவே எண்ணி தீபாவளி பண்டிகையைக் கிராமமாக புறக்கணித்து வருகின்றனர். இவர்களின் புறக்கணிப்பு, இந்த காலத்திலும் இப்படியெல்லாமா இருக்கீங்க என்று வியப்பில் ஆழ்த்துகிறது.

மேலும் இது குறித்து மாம்பட்டியைச் சேர்ந்த சபா.ராஜராஜன் கூறுகையில், "தீபாவளி வருகின்ற மாதத்தில் விவசாய வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறும். அச்சமயம் செலவுகளும் அதிகமாக இருக்கும். ஆகையால் இதனைச் சமாளிக்கும் பொருட்டு எங்களது ஐயா, சேவுகன் காலத்தில் 1958-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊர்கூடி, இனிமேல் எந்தக் காலத்திலும் தீபாவளி கொண்டாடு போவதில்லை. அதற்குப் பதிலாக நமது பொங்கல் திருவிழாவைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடலாம் என முடிவெடுக்கப்பட்டது.

மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைப்பட்டி, சந்திரபட்டி, கிளுகிளுப்பைப்பட்டி, இடையபட்டி, கலுங்குப்பட்டி, திருப்பதிப்பட்டி, பழையபட்டி, தோப்புப்பட்டி, கச்சப்பட்டி, இந்திரா நகர் ஆகிய கிராமங்கள் ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்தன. அன்றிலிருந்து தற்போதுவரை தீபாவளியை நாங்கள் கொண்டாடுவதே இல்லை" என்கிறார்.

தொடர்ந்து, மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளர் உலகநாதன் கூறுகையில், "கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு 12 கிராமங்களிலிருந்த அனைத்து சமூகப் பெரியோர்களின் முன்னிலையில்தான் மாம்பட்டி கிராம மந்தையில் கூடி தீபாவளி கொண்டாடப்படுவதில்லை என்ற முடிவு எட்டப்பட்டது. அதனை இன்று வரை சிறு பிசகின்றி கடைப்பிடித்து வருகிறோம்.

தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் புரவு எடுப்புத் திருவிழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடவும், தீபாவளியை அறவே கொண்டாடுவதில்லை என்பதும் அந்த முடிவாகும். பொருளாதார ரீதியில் மக்கள் மிகக் கடுமையாகத் துன்பப்படும் காலத்தில் விவசாயமே நமக்கு முக்கியம் என்ற அடிப்படையில்தான் இதனைக் கட்டளையாகக் கடைப்பிடித்து வருகிறோம். யாரும் யாரிடமும் திணிக்கவில்லை.

இது ஊர் கூடி எடுத்த முடிவு. தற்போது ஊரிலுள்ள அனைவரும் கூடி இனி தீபாவளி கொண்டாடலாம் என முடிவெடுத்தாலும் அதிலொன்றும் தவறில்லை. ஆனால், முன்னோர்கள் எடுத்த முடிவுக்கு, 12 கிராமங்களும் இன்று வரை முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதனை இனி வருகின்ற தலைமுறைகளுக்கும் கொண்டு செல்வோம்" என்றார்.

அதே ஊரைச் சேர்ந்த ஜோதிமணி என்ற முதியவர் கூறுகையில், 'தீபாவளியை ஒட்டிய உழவுப் பணிகள் காரணமாகக் கிராம மக்களுக்குக் கடன் சுமை அதிகரிக்கிறது என்பதற்காகவே இந்த முடிவு கிராமத்தில் எடுக்கப்பட்டது. அப்போது எனக்கு 10 வயது இருக்கும். இப்போதும்கூட தீபாவளியன்று எங்கள் வீடுகளில் வெறும் கஞ்சிதான். அன்றைய தினம் சுடுசோறுகூட சமைக்க மாட்டோம். எந்த சமையலும் தீபாவளியன்று நடைபெறாது. எங்கள் ஊரில் சம்பந்தம் செய்தவர்கள் பலகாரங்கள் கொண்டு வரக்கூடாது. அதனைத் தெய்வ குத்தமாகவே நாங்கள் பார்க்கிறோம்" என முன்னோர்களின் வாக்கினை மீற இயன்றளவிலும் கூட மக்கள் தயங்குவதைத் தெளிவாகக் கூறினார்.

அதே பகுதியைச் சேர்ந்த கவிதா கூறுகையில், "எனக்குச் சொந்த ஊர் மதுரை. என் கணவருக்கு இதுதான் சொந்த ஊர். பொருளாதார ரீதியாக மக்களின் நிலை உணர்ந்து எடுக்கப்பட்ட முடிவு. என்னதான் எனக்குச் சொந்த ஊர் மதுரை என்றாலும், இந்த ஊர் முன்னோர்களின் முடிவு எனக்கும் பொருந்தும். எங்கள் ஊரின் மற்ற திருவிழாக்களை மிக விமரிசையாகக் கொண்டாடுவோம்" என்கிறார்.

ஒப்பிலான்பட்டியைச் சேர்ந்த இளைஞர் கோகுல் கூறுகையில், "என்னுடைய அப்பாவுக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்தே, எங்கள் ஊரில் தீபாவளி கொண்டாடுவதே இல்லை. இந்த ஊரில் பிறந்து வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் வாழ்கின்றவர்களும் தீபாவளி கொண்டாடுவதில்லை. எங்களுக்கும் தீபாவளி பெரிய விசயமாகவே தெரிவதில்லை. சிறிய வயதிலிருந்தே தீபாவளி கொண்டாட்டங்கள் இல்லை என்பதால் மற்ற எந்த விசயங்களும் எங்களைச் சலனப்படுத்தாது" என்றார்.

முன்னோர்கள் எடுத்த ஒரு முடிவுக்காகக் கொண்டாட்டத்திற்கான அடையாளமாக உள்ள தீபாவளி பண்டிகையைப் புறக்கணிக்கும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 12 கிராம மக்களின் கதை கேட்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. விவசாயத்தை மற்றொரு வகையில் வாழ வைக்கும் இவர்களின் உயர்ந்த மனதையும் இந்த இடத்தில் பாராட்டாமல் கடந்து செல்ல இயலவில்லை.

இதையும் படிங்க: தீபாவளி வந்துருச்சு!... சம்பளம் தருவீங்களா.. மாட்டீங்களா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.