தீபாவளி வந்துருச்சு!... சம்பளம் தருவீங்களா.. மாட்டீங்களா?
Published : Nov 3, 2023, 2:33 PM IST
ஈரோடு: தமிழ்நாடு முழுவதும் கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கு மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த மூன்று மாத காலமாகவே சரி வர ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இன்று பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த 500க்கும் மேற்பட்ட நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூன்று மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளி வந்திருச்சு.. சம்பளம் தருவீங்களா?.. மாட்டீங்களா?.. என தொழிலாளர்கள் கோஷமிட்டனர்.
அதை தொடர்ந்து ஊதியம் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர். அதேபோல, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 15 ஊராட்சிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பெண்கள் ஊதியம் வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று மாதங்களாக கூலி வழங்காததை கண்டித்தும், உடனே வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.