ETV Bharat / state

சசிகலா எந்தச் சூழலிலும் அதிமுகவில் நுழைய முடியாது - கே.பி. முனுசாமி திட்டவட்டம்

author img

By

Published : May 31, 2021, 5:34 PM IST

Updated : May 31, 2021, 7:00 PM IST

KP
KP

கிருஷ்ணகிரி: சசிகலா எந்தச் சூழலிலும் அதிமுகவில் நுழைய முடியாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள், கரோனா காலம் முடிந்தவுடன் மீண்டும் தீவிர அரசியலில் சசிகலா ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளார், அதுகுறித்து உங்கள் கருத்து என்ன என கேள்வியெழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த கே.பி. முனுசாமி, 'அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்திற்கும், சசிகலாவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் இந்தக் கட்சியிலேயே இல்லை. ஒரு சிலர் சசிகலாவை முன்னிலைப்படுத்தி, இது போன்ற கருத்துகளை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ஏற்படுத்தும் குழப்பத்திற்கு அதிமுக ஒருபோதும் செவிசாய்க்காது.

சசிகலா பேசிய ஆடியோவை நானே கேட்டேன்

அதிமுக என்னும் இயக்கத்தை கழகத் தொண்டர்கள் கடுமையாகப் போராடி காப்பாற்றி வருகின்றனர். நிர்வாகிகளை ஏதாவது ஒருவகையில் திசைதிருப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். அவர்கள் எண்ணம் ஈடேறாது. சசிகலா பேசிய ஆடியோவை நானே கேட்டேன். எந்த அதிமுக தொண்டரும், அவரிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை.

சசிகலா அதிமுக இயக்கத்தில் நுழைய முடியாது

சசிகலாதான் தொடர்பு கொண்டு பேசுகிறார். பேசுகிற தொண்டர்கள் அமமுக தொண்டர்கள். அவர்களோடு உள்ள சில தொண்டர்களை தேர்ந்தெடுத்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். சசிகலா எந்தச் சூழ்நிலையிலும் அதிமுக இயக்கத்தில் நுழைய முடியாது. நுழைவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதில், ஒவ்வொரு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டனும் தெளிவாக இருக்கிறார்கள்.

அதிமுகவை உருவாக்கியது எம்ஜிஆர்

அதிமுகவை உருவாக்கியது சசிகலா இல்லை. அதிமுகவை உருவாக்கியது எம்ஜிஆரும், எம்ஜிஆர் மன்றத்தைச் சார்ந்தவர்களும் தான். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்பாக ஜெயலலிதா இயக்கத்தை வலிமையும் பொலிவும் ஏற்படுத்தி காப்பாற்றினார்கள். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் கிடையாது.

கரோனா பேரிடர் சமயத்தில், அவரவர் தங்கள் தொகுதியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி தனித்தனியாக கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சசிகலாவை முன்னிறுத்தி சிலர் குளிர்காய நினைக்கிறார்கள். இதற்கு சசிகலா இரையாகி விடக்கூடாது' என்றார்.

Last Updated :May 31, 2021, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.