ETV Bharat / state

அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்தில் 14 பேர் மரணம் முதல் அமைச்சர்கள் ஆய்வு வரை முழுத் தகவல்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 6:08 PM IST

Etv Bharat
Etv Bharat

Attibele Fire Accident: கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேரின் குடும்பங்களை நேரில் சந்தித்த அமைச்சர்கள் ஆறுதல் கூறியதோடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினர்.

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்கள்

கிருஷ்ணகிரி: தமிழக - கர்நாடகா மாநில எல்லைகளான ஜூஜூவாடி, அத்திப்பள்ளி பகுதியில் 30க்கும் அதிகமான பட்டாசு கடைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகையொட்டி ஆண்டுதோறும் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை படுஜோராக நடைபெறும். தீபாவளி பண்டிகை காலங்களில் மட்டும் பட்டாசுகளை விற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்களை தினமும் 600 ரூபாய் கூலி, தங்குமிடம், உணவு இலவசம் என அழைத்துவரப்படுவதும், பண்டிகை முடிந்ததும் கூலியுடன் இலவசமாக பட்டாசுகளை வாங்கிச் செல்வது வழக்கமான நடைமுறையாகும்.

அதேபோல தான், கர்நாடக மாநில எல்லையில், ராமசாமி ரெட்டி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் அவரது மகன் நவீண் என்பவர் பட்டாசு கடை அமைத்துள்ளார். அடுத்த மாதம் தீபாவளி என்பதால் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 5 பேர், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த 10 பேர் என 30 பேர் வரை வேலை செய்து வந்துள்ளனர்.

அங்கு, பெரிய கண்டெய்னர் லாரியிலிருந்த பட்டாசுக்களை 200 அடி நீளமுள்ள கடையில் இறக்கி வைத்து அடிக்கியும், மேலும் டாடா ஏஸ் வாகனங்களில் பட்டாசு பெட்டிகளை ஏற்றியும் தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். நேற்று நண்பகல் 3 மணியளவில் திடீரென கடையின் மைய பகுதியில் புகைக் கிளம்பி பட்டாசுக்கள் வெடித்து சிதறத்தொடங்கியது. அப்போது, முன்பக்கத்தில் இருந்தவர்கள் தப்பியோடிவிட கடையின் உள்ளே இருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.

தீ மளமளவென பரவி கரும்புகையுடன் பட்டாசுக்கள் வெடித்து சிதறியதால் கடை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. கடை முன்பாக இருந்த 7 இருசக்கர வாகனங்கள், ஒரு கண்டெய்னர் லாரி, 3 டாடா ஏஸ் வாகனங்கள் தீக்கிறையாகின. பின்னர் அத்திப்பள்ளி, பெங்களூர் பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடையிலிருந்து வெளியே ஓடி வந்தவர்கள், கடையில் இருபது பேர் வரை சிக்கியிருக்கலாம் என கூறி அதிர வைத்த நிலையில், மீட்பு பணிகள் தீவிரமடைந்தன. 5 மணிநேர மீட்புக்கிடையில் சடலங்கள் தேட தேட கிடைத்தது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

7 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் யார் என தெரியாத நிலையில், அனைவரும் தமிழர்கள் என்பது மட்டுமே உறுதியானது. உயிரிழந்தவர்களின் உடல்கள் அத்திப்பள்ளி ஆக்ஸ்போர்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து, அனைத்து குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களது வீட்டிற்கு அமைச்சர்களை அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.

கர்நாடகா மாநில அரசும் உயிரிழந்த 14 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. சம்பவம் நடந்து இரண்டாவது நாளான இன்று, தடயவியல் நிபுர்ணர்கள், மருத்துவக் குழுவினர் என 2 தனிப்படை குழுக்கள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஒசூர் உதவி ஆட்சியர் சரண்யா, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு ஆகியோர் உயிரிழந்தவர்களின் விபரங்களை சேகரித்தனர். இதில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவு பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர், உயிரிழந்த உடல்களுக்கு மரியாதை செலுத்தி அரசின் நிவாரண தொகையான 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை குடும்பத்தினருக்கு வழங்கினர். அப்போது, ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரகாஷ், மேயர் சத்யா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ண ரெட்டி அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோரும் ஆறுதல் கூறினர். தொடர்ந்து பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் விபத்தில் உயிரிழந்தவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

தொடர்ந்து, உடற்கூராய்வு செய்யப்பட்ட 14 உடல்கள் தனி தனி அமரர் ஊரதிகள் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. பட்டாசு கடை தீ விபத்து சம்பவத்தால் தமிழ்நாடு எல்லை ஜூஜூவாடி பகுதியில் சாலையோரமாக வரிசையாக அமைக்கப்பட்டிருந்த அனைத்து பட்டாசு கடைகளும் மூடப்பட்டன.

இதையும் படிங்க: சென்னையில் லீசுக்கு வீடு எனக்கூறி பல லட்சம் மோசடி.. பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.