சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, சேலையூர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பெரும்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்குளத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் லீசுக்கு வீடுகள் உள்ளன என ‘சன் ஹோம்’ என்ற தனியார் நிறுவனம் ஆங்காங்கே விளம்பரப் படுத்தியுள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி வாடகை வீட்டில் பணிபுரிந்து வந்தவர்கள், லீசுக்கு வீடுகளை தேடி சுற்றித் திரியும்போது பல்வேறு வீடுகளில் கேட்டுகளின் முன்னதாக ‘சன் ஹோம்’ நிறுவனத்தின் தொடர்பு எண்களை அட்டையில் எழுதி வைத்து இருந்ததாகவும் அதைப் பார்த்து ஏராளமானோர் சன் ஹோம் நிறுவனத்தை தொடர்பு கொண்டு 2 வருடங்களுக்கு ரூபாய் 6 லட்சம் என லீசுக்கு அக்ரீமெண்ட் போட்டு வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக வீட்டு உரிமையாளர்களுக்கு வாடகை தரவில்லையென கூறி வீட்டை லீசிக்கு எடுத்து வசித்து வந்த நபர்களிடம் சென்று வீட்டை விட்டு வெளியே செல்லும்படி வற்புறுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து தகலவறிய சன் ஹோம் நிறுவனத்தை நாடியுள்ளனர். அப்போது, அவர்கள் பணத்தை ஏமாற்றும் நோக்கத்தில் பேசியதாகவும், இதேபோல் பலரிடம் மோசடி செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கின்றனர்.
பலரும் லீசு முடிந்த நிலையில் பணத்தை திருப்பி கேட்டபோது இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று பல மாதங்களாக அலைக்கழித்து வந்ததால் அவர்களுக்குள் ஏற்பட்ட சந்தேகம் நாளடைவில் அவர் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள், பலமுறை சன் ஹோம் நிறுவனத்தை செல்போனில் தொடர்பு கொண்டு தங்களது பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார்கள் அளித்தனர். இரவு நேரத்தில் பெண்கள், ஆண்கள் என சுமார் 50க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டோர் காவல் நிலையத்தில் புகார்களை வழங்கினர். புகார் மீது விசாரணை மேற்கொள்வதாக காவல் துறையினர் கூறியதைத் தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
அப்போது பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “சன் ஹோம் என்ற தனியார் நிறுவனம் வீடு லீசுக்கு உள்ளதாக பார்க்கும் இடமெல்லாம் விளம்பரப்படுத்தி இருந்தது. அந்த விளம்பரத்தைப் பார்த்து சன் ஹோம் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது நேர்மையாக அவர்கள் பேசியதை நம்பிவிட்டோம். எங்களுக்கு லீசுக்கு வீடு வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தவர்கள் ரூபாய் ஆறு லட்சம் கொடுத்து ஒரு வீட்டை அக்ரிமெண்ட் போட்டு பதிவு செய்து கொண்டு, வீட்டில் வசித்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் சன் ஹோம் நிறுவனத்தினர் வீட்டு உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய வாடகை பணத்தை முறையாக கொடுக்காததால் வீசுக்கு எடுத்தவர்களை வீட்டு உரிமையாளர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினர். விரைந்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தரவேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: அத்திப்பள்ளி விபத்து; உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்