ETV Bharat / state

"மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை" - கரூரில் திமுக கவுன்சிலர் திடீர் ராஜினாமா!

author img

By

Published : Apr 28, 2023, 10:03 PM IST

Updated : Apr 29, 2023, 6:34 AM IST

Karur
கரூர்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியில், தனது வார்டுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி திமுக கவுன்சிலர் ஒருவர் ராஜினாமா செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் பள்ளப்பட்டி நகராட்சி திமுக கவுன்சிலர் ராஜினாமா

கரூர்: கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி சட்டபேரவைத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில், பள்ளப்பட்டி நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், 22 இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணி பள்ளப்பட்டி நகராட்சியைக் கைப்பற்றியது. பள்ளப்பட்டி நகராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த முனவர் ஜான் என்ற பெண்மணியும், துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த பள்ளப்பட்டி நகரச்செயலாளர் தோட்டம் பஷீர் என்பவரும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளப்பட்டி நகர்மன்ற மாதாந்திரக் கூட்டம், நகர்மன்ற அலுவலகத்தில் இன்று(ஏப்.28) நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் முனவர் ஜான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வார்டு உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கலந்துகொண்ட வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அப்போது, திமுகவைச் சேர்ந்த 15-வது வார்டு உறுப்பினர் ஜமால் முகமது, தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக்கூறி கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக, நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளப்பட்டி நகர்மன்ற கவுன்சிலர் கூட்டத்தை ஒளிப்பதிவு செய்ய செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளப்பட்டி நகராட்சி திமுக கவுன்சிலர் ஜமால் முகமது, "பள்ளப்பட்டி நகர்மன்றக் கூட்டத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மக்கள் கோரிக்கையை முன்வைத்து அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் நகர்மன்றத் தலைவரும், நகராட்சி அதிகாரிகளும் மேற்கொள்ளவில்லை. நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு தரப்படுவதில்லை. அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.

திமுக உறுப்பினராக இருந்த பொழுதும், எனது பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டியதால், இன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் ராஜினாமா கடிதம் வழங்கியிருக்கிறேன்.

35 ஆண்டுகளாக திமுகவில் உறுப்பினராக இருக்கிறேன். ஆளுங்கட்சி கவுன்சிலராக இருந்தும் எனது கோரிக்கைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இது தொடர்பாக கவுன்சிலர்களிடம் பேசுவதும் இல்லை, எல்லாவற்றையும் அவர்களுக்குள்ளாக பேசி முடித்துக் கொள்கிறார்கள்" என்று கூறினார்.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் முனைவர் ஜானிடம் கேட்டபோது, "அரசியல் பழிவாங்கும் நோக்கில் சிலரின் தூண்டுதலின் பேரில் திமுக உறுப்பினர் ராஜினாமா கடிதத்தை வழங்கி, தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். பெண் நகர் மன்றத் தலைவராக சிறப்பாக பள்ளப்பட்டி நகராட்சியை நிர்வகித்து வருகிறேன். அது மக்களுக்கும், திமுக தலைமைக்கும் நன்கு தெரியும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: சென்னையில் பல தனியார் நட்சத்திர ஹோட்டல்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு!

Last Updated :Apr 29, 2023, 6:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.