ETV Bharat / state

கலப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு.. கரூரில் தம்பதி பரபரப்பு புகார்!

author img

By

Published : Aug 11, 2023, 10:58 PM IST

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தம்பதியினர், பாதுகாப்பு மற்றும் தங்கள் உரிமையை பெற்று கொடுக்குமாறு கரூர் எஸ்பியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு

கரூர்: கரூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியினரை, ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கொடூரம் தொடர்பாகக் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்று புகார் மனு அளித்தனர். கரூர் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர், சுந்தரபாண்டி 23. கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர் வேங்கடத்தான்பட்டி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முள்ளிப்பாடி பகுதியைச் சேர்ந்த ஊர் நாட்டாமை பெருமாள் மற்றும் செந்தில்குமார் அண்ணாதுரை ஆகியோர் சேர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ஊர் பொதுமக்கள் முன்னிலையில், பொது முடிவு எனக் கூறி சுந்தர பாண்டியனின் தாய், தந்தை மற்றும் அவரது மனைவியிடம் சுந்திர பாண்டியன் இறந்ததாக நினைத்து ஈம சடங்குகள் செய்தால் மட்டுமே சேர்த்துக் கொள்வோம் எனக் கூட்டத்தில் தெரிவித்தனர்.

இந்நிலையில், முள்ளிப்பாடியில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கருப்புசாமி மதுரை வீரன் பட்டவன் ஏழு கன்னிமார் ஆகிய தெய்வங்களுக்குத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் போது, கோயிலுக்குப் பூசாரி ஆக உள்ள சுந்தரபாண்டி, கோயில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது எனக் கூறி கரகம் பாளித்தல், தீர்த்தம் கொண்டு வருவது போன்ற பல நிகழ்ச்சிகளில் அவரை ஒதுக்கி வைத்து, துவக்க நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர்.

மேலும் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தொடர்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், சுந்தரபாண்டி கோயில் பூசாரியாக எந்த பணியிலும் மேற்கொள்ளக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளதாகத் தெரிவித்து உள்ளனர். எனவே சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கோயில் பூசாரியான தன்னை ஒதுக்கி வைத்திருப்பதாகக் கரூர் எஸ்பி அலுவலகத்தில் அவரது மனைவியுடன் புகார் மனு அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறியாளர் அணியின் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் செந்தில் குமார், மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் ராமச்சந்திரன், கடவூர் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் துணைச் செயலாளர் பொறியாளர் கரிகாலன், கண்மணி ராமச்சந்திரன் கிருஷ்ணராயபுரம் தொகுதி செயலாளர் வீர.பேரளிவாளன், சுப்பிரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாதிக்கப்பட்ட புவனேஸ்வரி, "சாதி மறுப்பு திருமணம் செய்த காரணத்தினால், தனது கணவரின் பூசாரி உரிமையை ஊர் முக்கியஸ்தர்கள் பறித்துள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் திருவிழாவில் தனது கணவர் ஏழு கன்னிமார் கோயில் பூசாரியாக மீண்டும் கோயிலுக்குள் சென்று அனைத்து சடங்குகளும் செய்ய அனுமதிக்க வேண்டும். தனது கணவரின் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள ஊர் முக்கியஸ்தர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பாதுகாப்பாக ஊரில் வாழ்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கரூர் எஸ்பியிடம் கோரிக்கை அளித்து இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், "உள்ளூர் மளிகை கடைகளில் கூட தங்களுக்குப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என ஒரு கட்டுப்பாடு விதித்துள்ளனர். கணவரின் தாய், தந்தை ஆகியோரை மிரட்டி, தனது கணவர் இருந்ததாகக் கருமாரி சடங்குகள் செய்துள்ளனர். தற்போது ஊர் திருவிழாவில் ஒதுக்கி வைத்துவிட்டு பூசாரி உரிமையும் பறித்து, பல்வேறு இடையூறுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர். மேலும் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதால் அரசு உடனடியாக தங்களுக்கு உதவி கரம் வழங்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Nanguneri Student Attack: நெல்லை கொடூரம்.. வெட்டுப்படாத இடமே கிடையாது.. மாணவர்களின் வெறிக்கு யார் காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.