ETV Bharat / state

“தமிழக அரசின் நீட் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன்” - சகாயம் ஐஏஎஸ்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 2:06 PM IST

sagayam ias
சகாயம்  ஐ.ஏ.எஸ் பேட்டி

Sagayam IAS: தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணத்தினைக் கொடுத்து அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகளாக மாறி விடுகிறார்கள் என சகாயம் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

சகாயம் ஐ.ஏ.எஸ் பேட்டி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலுக்கு வந்த சகாயம் ஐ.ஏ.எஸ் பேசுகையில், “அரசுப் பணியிடங்களுக்கு தயாராகி வரும் மாணவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு வழிகாட்டுவது மட்டுமல்ல, எதிர்காலத்தில் நேர்மையான அதிகாரியாக பணியாற்றிட வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

நீட் தேர்வைப் பொறுத்தவரையில், அடிப்படையில் பொதுவான ஒரு தேர்வை நடத்துவதற்கு பொதுவான பாடத்திட்டத்தை படித்தவர்களுக்கு, இந்த தேர்வைச் சந்திப்பது எளிதானது. ஆனால் வெவ்வேறு பாடத்திட்டங்களைப் படித்தவர்கள், இந்தத் தேர்வைச் சந்திப்பது கடினமாகும். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் இருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு இது பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். எனவே, நீட் தேர்வு தேவை இல்லை என்ற தமிழ்நாடு அரசின் நிலைபாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம்.

இந்தியா என்பது ஒரு ஜனநாயக நாடு. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளது. இதில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர்கள் நம்முடைய சாதி, மதத்தைச் சேர்ந்தவர், நம்முடைய ஊர்காரர்கள் என்று பார்க்கக் கூடாது. எந்த வேட்பாளர் நமது தொகுதிக்கு சிறப்பாக செயல்படுவார், ஒரு காலமும் பொதுச்சொத்தை திருட மாட்டார், இயற்கை வளங்களை சூறையாட மாட்டார் என்ற நல்ல மனிதர்களை, நமது பிரதிநிதியாக மக்கள் தேர்ந்தெடுத்து வைக்க வேண்டும். ஒருபோதும் பணத்திற்காக வாக்களிக்கக் கூடிய கயமை செயலில் நாம் ஈடுபடக் கூடாது.

வாக்காளர்களுக்கு பணத்தினைக் கொடுத்து, அரசியல்வாதிகள் அனைவரையும் ஊழல்வாதிகளாக மாற்றி விடுகிறார்கள். ஆகவே, நேர்மையான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தை ஏறக்குறைய 1 கோடி அளவிற்கு படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்துக் கொண்டு இருக்கக் கூடிய மோசமான நிலைமை இருந்து கொண்டிருக்கிறது. காரணம், மரபு வழியான தொழில்கள் எல்லாம் அழிந்து வருகிறது. இந்த நிலையைப் போக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையத்தின் தலைவராக சைலேந்திர பாபுவைத் தேர்ந்தெடுத்து தமிழக அரசு அனுப்பிய கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். ஏற்கனவே லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இன்றி இருக்கிறார்கள். எனவே, இது போன்ற நியமனங்களில் தடை ஏற்படுத்துவது என்பது பாதகத்தை ஏற்படுத்தும்” என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விரைவில் 2,000க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.