ETV Bharat / state

டீக்கடை உரிமையாளரை மிரட்டி பைக், செல்போன் திருட்டு - போலீஸ் விசாரணை!

author img

By

Published : Jun 30, 2022, 5:30 PM IST

டீ கடை உரிமையாளரை மிரட்டி பைக், செல்போன் திருட்டு
டீ கடை உரிமையாளரை மிரட்டி பைக், செல்போன் திருட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அரசு மதுபானக்கடை அருகே டீக்கடை உரிமையாளரை பீர் பாட்டில் மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு செல்போன், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம்: அவளூர் கூட்டுச்சாலையில் பாலமுருகன் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே டீக்கடை மற்றும் பெட்டிக்கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது டீக்கடையில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரசு மதுபானக்கடையில் பாலமுருகன் மதுபானம் வாங்கி ஒதுக்குப்புறமாக அமர்ந்து மதுபானம் அருந்தியுள்ளார்.

அப்போது அங்கு ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் மது அருந்திக்கொண்டிருந்த பாலமுருகனிடம் கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் இல்லை எனக் கூறவே ஏடிஎம் கார்டை கேட்டுள்ளனர். ஏடிஎம் கார்டு கொண்டு வரவில்லை எனக் கூறியதைக் கேட்டு ஆவேசமடைந்த அந்த மூன்று பேரும் சற்றும் எதிர்பாராத நேரத்தில் பாலமுருகனை திடீரென கத்தியால் சரமாரியாகத் தாக்கியும், அங்கிருந்த பீர் பாட்டிலாலும் பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த பாலமுருகனிடமிருந்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக் மற்றும் 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த பாலமுருகன் சுமார் ஒரு மணி நேரம் கழித்து எழுந்து, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று பேருந்து நிலையம் அருகே உள்ள ஏபிஜே என்ற தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைப்பெற்றார்.

பின்னர் அங்கிருந்து அவசர ஊர்தி வாகனத்தின் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனைத்தொடர்ந்து இந்த வழிப்பறி கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மூன்று நபர்களை தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

மேலும் இந்த வழிப்பறிக் கொள்ளை சம்பவத்திற்குப் பின்னர் இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்ற மூன்று பேரும் அவளூர் கூட்டுச்சாலையில் வந்த லாரியை மடக்கி, ஓட்டுநரிடம் கத்தியைக் காண்பித்து மிரட்டிப் பணத்தை பறித்துக்கொண்டு தப்பித்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த மகன் மற்றும் அதனை ஆதரித்த தந்தை ஆகியோர் போக்சோவில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.