ETV Bharat / state

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்ட தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள்

author img

By

Published : Dec 11, 2020, 6:50 PM IST

private
private

காஞ்சிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் கனடா நாட்டு பன்னாட்டு தொழில் நிறுவனத்தின் ஒரு பகுதியான தனியார் தொழிற்சாலை ஒன்று கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையில் 77 நிரந்தர பணியாளர்களும், 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிறுவனத்தில் தொழிலாளர்களின் நலனுக்காக ஏற்கனவே ஐஎன்டியூசி என்ற தொழிற்சங்கம் மூன்று வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த சங்கத்தின் செயல்பாடுகள் இங்கு வேலை செய்கின்ற பணியாளர்களுக்கு உதவியாக இல்லாமல் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டு வந்ததால் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து உழைப்போர் உரிமை இயக்கம் ஏஐடியுசி என்ற சங்கத்தை புதிதாக தொடங்கினர்.

இதனால் கோபமடைந்த நிர்வாகம் இச்சங்கம் தொடங்க முன்னோடியாக இருந்த 4 பேரை பணியிடை நீக்கம் செய்தது. அதனை தொடர்ந்து தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியிடை நீக்கம் செய்த நபர்களை உடனடியாக பணியில் சேர்க்கவேண்டும். உழைப்போர் உரிமை இயக்கம் (ஏஐடியுசி) சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 99 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று 100 ஆவது நாளாக தங்களது போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் விதமாக தொழிற்சாலை தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலிலிருந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை அங்கு பணியிலிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி சுமூக முடிவை எடுப்பதாக அளித்த வாக்குறுதியின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். செப்டம்பர் மாதம் 21ஆம் தேதியன்றும் இதே தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.