ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: தாமல் ஏரியில் கலெக்டர் ஆய்வு - கிராமப்புற ஏரிகளை கண்காணிக்க குழு!

author img

By

Published : Nov 3, 2022, 7:14 PM IST

தாமல் ஏரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு! கிராமப்புற ஏரிகளை கண்காணிக்க குழு அமைப்பு
தாமல் ஏரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு! கிராமப்புற ஏரிகளை கண்காணிக்க குழு அமைப்பு

கிராமப்புறங்களிலுள்ள ஏரிகளை கண்காணிப்பதற்கு கிராம ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி செயலாளர், வி.ஏ.ஓ ஆகியோர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து ஏரிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையையொட்டி பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக, ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 39 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான 1,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாமல் ஏரியானது தொடர் கன மழையின் காரணமாக முழுக்கொள்ளளவான 18அடியும் முழுவதுமாக நிரம்பி, ஏரியின் கலங்கள் வழியாக உபரிநீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது.

இந்த தாமல் ஏரியின் கலங்கள் பகுதியில் ஆர்ப்பரித்துக்கொண்டு வெளியேறி வரும் உபரி நீரையும் பொருட்படுத்தாமல், எவ்வித ஆபத்தையும் உணராமல் சிறுவர்கள், இளைஞர்கள் உற்சாகத்துடன் ஆனந்த குளியல் போட்டு குத்தாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏதேனும் அசாம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக காவல் துறையினர் அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு, தடையை மீறி குளித்து வருபவர்களை அப்புறப்படுத்தி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நமது ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இச்செய்தியின் எதிரொலியாக, இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி தாமல் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரியிலுள்ள நீர் இருப்பு, வெளியேற்றம் என்பன குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி கூறுகையில், 'வடகிழக்குப் பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கன மழையினால் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: தாமல் ஏரியில் கலெக்டர் ஆய்வு - கிராமப்புற ஏரிகளை கண்காணிக்க குழு!

தற்போது மாவட்டத்தில் தென்னேரி ஏரி, உத்திரமேரூர் பெரிய ஏரி,தாமல் என மூன்று மிகப்பெரிய ஏரிகள் உள்ளன. இதில் மூன்றாவதாக உள்ள தாமல் ஏரி முழுக் கொள்ளளவை எட்டி உபரி நீரானது கலங்கள் வழியாக வெளியேறி வருகின்றன.

ஆகையால், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் குளிப்பதற்கும், மீன் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாகம் மூலமாக இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது’ எனவும் தெரிவித்தார்.

மேலும், கிராமப்புறங்களிலுள்ள ஏரிகள், அந்தந்த கிராம நிர்வாகத்தின் மூலம் கண்காணிப்பதற்கு கிராம ஊராட்சி மன்றத்தலைவர், ஊராட்சி செயலாளர், வி.ஏ.ஓ ஆகியோர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து ஏரிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது தாமல் ஏரியில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் குளிப்பது, மீன் பிடிப்பது போன்ற செயல்களைத் தடுக்கும் பொருட்டு காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து இதுபோல் முழுக் கொள்ளளவை எட்டிய ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் பகுதிகள் குறித்தான தகவல்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் உடனுக்குடன் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அப்பகுதியை காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர் எனத்தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்...ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.