ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில் மூடப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் மாதம் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது. இருப்பினும் அமாவாசை தினங்களில் பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (அக். 16) கோயில் நடை அடைத்திருந்த போதிலும் காலை முதல் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் வாயில் முன்பு நின்று அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து கோயில் முன்பு உப்பு, மிளகு தூவி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் நெய் தீபமேற்றியும் வழிபட்டனர்.
இதையும் படிங்க: பக்தர்கள் தரிசனம் ரத்து: பண்ணாரியம்மன் கோயில் நிர்வாகம்